
ஜோகூர் பாரு, ஜூலை.16- இஸ்ரேலிய நாட்டவர்கள் சம்பந்தப்பட்டதாகக் கூறப்படும் Network School நடவடிக்கைகள் மீதான விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருப்பதாக Forest City மேம்பாட்டாளர் நிறுவனம் தெரிவித்துள்ளது. அவ்விவகாரத்தைத் தீவிரமான ஒன்றாகக் கருதுவதாகவும் சட்டத்தை மீறும் மற்றும் நாட்டின் இறையாண்மையைக் களங்கப்படுத்தும் எந்தவொரு நடவடிக்கைகளுக்கும் ஜோகூரை ஒரு தளமாகப் பயன்படுத்த அனுமதிக்காத மாநில அரசின் நிலைப்பாட்டை ஆதரிப்பதாகவும் அது கூறியது. அதோடு உள்துறை அமைச்சு, குடிநுழைவுத்துறை, காவல்துறை, சுங்கத் துறை, உள்ளூர் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் ஆகிய தரப்புகளுக்கும் ஒத்துழைப்பு வழங்க அது தயாராக இருக்கிறது.
சட்ட மீறல்கள், வளாகங்களைத் தவறாகப் பயன்படுத்துதல், குடிநுழைவு விதிமுறைகளைப் பின்பற்றாதது, பொதுப் பாதுகாப்பு மற்றும் ஆபத்து விளைவிக்கும் நடவடிக்கைகளைச் சகித்துக் கொள்ள முடியாது என்றும் அந்நிறுவனம் திட்டவட்டமாகத் தெரிவித்தது. இஸ்ரேலிய நாட்டவர்கள் காணப்படுவதாகக் கூறப்படும் Forest Cityயில் உள்ள Network School செயல்பாடுகள் குறித்து விசாரணை நடத்துமாறு முன்னதாக ஜோகூர் மந்திரி பெசார் Datuk Onn Hafiz Ghazi வலியுறுத்தியிருந்தார்.
சம்பந்தப்பட்ட நபர்கள் இரண்டாவது நாட்டின் கடப்பிதழ்களைப் பயன்படுத்தி மலேசியாவிற்குள் நுழைந்ததாக நம்பப்படுவதாகவும், இது பொதுமக்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியிருந்தார். குடிநுழைவுத்துறை நேற்று Forest Cityயில் 266 வெளிநாட்டினரிடம் சோதனை நடத்தியது. தொடக்கக் கட்ட சோதனைகளில், அனைத்து நபர்களிடமும் செல்லுபடியாகும் உரிய ஆவணங்கள் இருப்பது கண்டறியப்பட்டது. எனினும் விசாரணை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



