
சுங்கை பட்டாணி, ஏப்ரல்-28-சுங்கை பட்டாணியில் தனது கர்ப்பிணி மனைவியைத் தாக்கி கருச்சிதைவை ஏற்படுத்திய ஆடவர் ஒருவருக்குப் பின்னால் இருக்கும் அதிர்ச்சியூட்டும் குற்றப் பின்னணியைக் கெடா போலீஸார் தற்போது வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளனர்.
Ambangan Heights-சில் தனது தற்போதைய மனைவியை அவ்வாடவர் கொடூரமாகத் தாக்கியதில் அம்மாதுவுக்குக் கருச்சிதைவு ஏற்பட்டுள்ளது.
ஆனால், விசாரணையில் இந்த 43 வயது நபர் ஏற்கனவே ஜோகூரில் தனது முன்னாள் மனைவியை உயிருக்கு ஆபத்தான நிலையில் தாக்கியதும், அதன் விளைவாக அந்தப் பெண் கோமா நிலைக்குச் சென்றதும் தெரியவந்துள்ளது.
இந்தக் கொடூரச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த சம்பவத்தில் 12 வார கரு கலைந்ததோடு, முகத்திலும் உடலிலும் காயமடைந்த மனைவி தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
அவருக்குத் தேவையான மனநல ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.
இதையடுத்து Rosmaini Abd. Raof எனும் அவ்வாடவரை போலீஸார் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
இவர், ஏற்கனவே ஜோகூரில் முன்னாள் மனைவியைத் தாக்கி கோமா நிலைக்குக் கொண்டுச் சென்ற குற்றத்திற்காக 10 ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றவர்.
எனினும் மேல் முறையீடு மீதான தீர்ப்பு வரும் வரை அத்தண்டனையின் அமுலாக்கம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.



