பெரிக்காத்தான் தலைவர் சம்சுரி, ஹம்சாவுக்கு பதில் எதிர்க்கட்சித் தலைவராக நியமனம்

கோலாலாம்பூர், மே-16,
பெரிகாத்தான் நேஷனல் (PN) கூட்டணியின் தலைவர் டத்தோ ஸ்ரீ Dr அஹ்மாட் சம்சுரி மொக்தார், நாடாளுமன்றத்தின் புதிய எதிர்க்கட்சித் தலைவராக அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்டுள்ளார்.
கோலாலம்பூரில் நடைபெற்ற PN உச்சமன்றக் கூட்டத்திற்குப் பிறகு, அதன் பொதுச்செயலாளர் டத்தோ ஸ்ரீ தாக்கியுடுன் ஹசான் இத்தகவலை உறுதிப்படுத்தினார்.
இதன் மூலம், திரங்கானு மந்திரி பெசாரும் கெமாமான் நாடாளுமன்ற உறுப்பினருமான சம்சுரி, பெர்சாத்துவிலிருந்து நீக்கப்பட்ட டத்தோ ஸ்ரீ ஹம்சா ஜைனுடினுக்குப் பதிலாக இப்பதவியை ஏற்றுக்கொள்கிறார்.
சம்சுரியின் நியமனம் மூலம், சுமார் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பாஸ் கட்சியைச் சேர்ந்த ஒருவர் மக்களவை எதிர்கட்சித் தலைவராகிறார்.
இதற்கு முன், 2002 முதல் 2004 வரை, பாஸ் கட்சித் தலைவர் தான் ஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் அப்பதவியை வகித்தார்.
இவ்வேளையில், அடுத்த பொதுத் தேர்தலை எதிர்கொள்வதற்கான ஆயத்தப் பணிகளுக்காக, மாநில அளவிலான பெரிக்காத்தான் கட்டமைப்புகளை மறுசீரமைப்பது குறித்தும் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதாக தாக்கியுடின் கூறினார்.
மேலும், பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணியின் கொள்கைகளுடனும் நலன்களுடனும் ஒத்துப்போகும் பிற கட்சிகளுடன் தேர்தல் உடன்படிக்கை அல்லது கூட்டணியை ஏற்படுத்திக் கொள்வதற்கும் இக்கூட்டத்தில் கொள்கை அளவில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.



