
பைத்தான், மே-17-16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் தனியாகவோ அல்லது சுதந்திரமாகவோ சமூக ஊடகக் கணக்குகளை நிர்வகிப்பதைத் தடுக்கும் புதியக் கட்டுப்பாடுகளை இவ்வாண்டு மத்தியில் அமுல்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
அவ்வகையில், இணையப் பாதுகாப்புச் சட்டங்களை வலுப்படுத்தும் நோக்கில், சமூக ஊடகச் சேவை வழங்குநர்கள் தங்களின் தளங்களில் பெற்றோர்களின் கட்டுப்பாட்டு வசதிகளைக் கட்டாயமாக வழங்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, சபா, பைத்தான் (Paitan) மாவட்டத்தில் நடைபெற்ற ‘பாதுகாப்பான இணையப் பிரச்சாரக் கூட்டு விழாவை’ மாநிலக் கல்வி, அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க அமைச்சர் டத்தோ ஜேம்ஸ் ரத்தீப் அதிகாரப்பூர்வமாகத் தொடக்கி வைத்தார்.
மலேசியத் தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (MCMC) ஏற்பாடு செய்த இந்த விழாவில், போலீஸ் படை மற்றும் சமூக நலத்துறை போன்ற முக்கிய அமைப்புகள் கலந்துகொண்டு இணையப் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தின.
கிராமப்புற மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் நடத்தப்பட்ட இந்த முதல் பிரச்சார விழாவைத் தொடர்ந்து, சபா முழுவதும் மேலும் 19 இடங்களில் இத்தகைய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படவுள்ளன.
சபாவில் கடந்த 2023 முதல் இவ்வாண்டு மே வரை 5,455 இணையக் குற்றப் புகார்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 1,500 இணைய மோசடிச் சம்பவங்களுடன், இணையப் பகடிவதை மற்றும் சிறார் ஆபாசக் குற்றங்களும் அதிகரித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



