
சிரம்பான், மே 22 – 4 வயது சிறுவனை வீட்டிற்கு வெளியே உட்கார வைத்து, அக்குழந்தையைத் தாக்கும் காணொளி வைரலான நிலையில், அச்சிறுவனை பராமரித்து வந்த பெண் ஒருவர் நேற்றிரவு செண்டாயனில் உள்ள வீட்டில் போலீசார் கைது செய்தனர்.
சமூக ஊடகங்களில் வைரலான ஒரு நிமிடம், 15 வினாடிகள் கொண்ட காணொளிப் பதிவைப் பார்த்த பின்னர் , அதில் உள்ள சிறுவன் தங்கள் குழந்தைதான் என அவனது பெற்றோர் அடையாளம் கண்டதோடு அந்தத் தகவலை போலீசிற்கு தெரிவித்ததாக நெகிரி செம்பிலான் போலீஸ் தலைவர் டத்தோ அல்சாப்னி அகமட் ( Alzafny Ahmad) கூறினார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் மருத்துவ பரிசோதனைக்காக சிரம்பான் துவாங்கு ஜாஃபர் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டான்.
கைது செய்யப்பட்ட 60 வயது பெண்மணி 2001 ஆம் ஆண்டின் குழந்தைகள் சட்டத்தின் பிரிவு 31(1)(a)-க்கு ஏற்ப விசாரணைக்கு உதவும் பொருட்டு தடுத்து வைக்கப்பட்டதை அல்சாப்னி உறுதிப்படுத்தினார்.
குழந்தைகளுக்கு எதிரான எந்தவொரு துஷ்பிரயோகத்தையும் போலீஸ்துறை தீவிரமாகக் கருதுவதால் , விசாரணையைப் பாதிக்கக்கூடிய ஆருடங்களையோ அல்லது சரிபார்க்கப்படாத தகவல்களையோ பொதுமக்கள் பரப்ப வேண்டாம் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.



