கோலாலம்பூரில் ஒரு முக்கியக் கட்டடத்திற்கு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே: போலீஸ் தகவல்

கோலாலம்பூர், மே-24,
கோலாலம்பூரில் உள்ள ஒரு முக்கியக் கட்டடத்திற்கு நேற்றிரவு விடுக்கப்பட்ட வெடிகுண்டு மிரட்டல் வெறும் புரளியே எனப் போலீஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இரவு 9.09 மணியளவில் அந்தக் கட்டடத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தவரிடமிருந்து போலீஸாருக்கு அவசர அழைப்பு வந்தது.
கட்டடத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு வந்த ஒரு மின்னஞ்சலில், அதன் வட கோபுரத்தின் 23-ஆவது மாடியில் வெடிகுண்டு வைக்கப்பட்டிருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டிருந்ததாக,
பிரிக்பீல்ட்ஸ் போலீஸ் தலைவர் ACP Hoo Chang Hook தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து, வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவு, K-9 மோப்ப நாய் பிரிவு மற்றும் தடயவியல் துறையினர் உடனடியாக சம்பவ இடம் விரைந்து தீவிரச் சோதனை நடத்தினர்.
சோதனையின் முடிவில், அங்கு சந்தேகத்திற்கிடமான பொருட்கள் எதுவும் கண்டறியப்படாததால், அது ஒரு போலி மிரட்டல் என்பது உறுதிச் செய்யப்பட்டதாக, Hoo Chang Hook கூறினார்.
புரளியைக் கிளப்பி பதற்றத்தை ஏற்படுத்திய இச்சம்பவம் தொடர்பாக, 1998-ஆம் ஆண்டு தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் மற்றும் குற்றவியல் சட்டத்தின் கீழ் போலீஸார் தற்போது தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.



