
தனது கர்ப்பம் குடும்பத்தினருக்குத் தெரிந்துவிடும் என்ற கவலையில், ஒரு பெண் (TBS) பேருந்து முனையத்தின் கழிப்பறையில் ஒரு ஆண் குழந்தையைப் பெற்றெடுத்து, பின்னர் அக்குழந்தையின் சடலத்தை ஒரு குப்பைத் தொட்டியில் வீசியதாக நம்பப்படுகிறது. கடந்த வெள்ளிக்கிழமை சிலாங்கூர், செப்பாங்கில் ஒரு தம்பதியினரை போலீஸ் கைது செய்த பின்னரே இந்த செயல் அம்பலத்திற்கு வந்தது. ஜூன் 9 ஆம்தேதியன்று TBS முனையத்தின் மூன்றாவது மாடியில் உள்ள பெண்கள் கழிப்பறையில் ஒரு நீல நிற பிளாஸ்டிக் பையில் பச்சிளம் குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்டதாக போலீசிற்கு தகவல் கிடைத்ததாக செராஸ் மாவட்ட போலீஸ் துணைத் தலைவர் Superintendan லிம் சுன் ஹோவ் ( Lim Chun How) கூறினார்.
இதைத் தொடர்ந்து, செராஸ் மாவட்ட போலீஸ் தலைமையகத்தின் ) தீவிர குற்றப் புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைக்கு உதவுவதற்காக செப்பாங்கில் 21 வயது காதல் தம்பதியை கைது செய்தனர். அந்த சந்தேக நபர்கள் இருவரும் இந்த விவகாரத்தில் தங்களுக்கு தொடர்பு இருப்பதை ஒப்புக் கொண்டனர். அவர்கள் விசாரணைக்காக நாளைவரை தடுத்து வைக்கப்பட்டனர். தண்டனைச் சட்டத்தின் 318 ஆவது பிரிவின் கீழ் இந்த விவகாரம் குறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



