
கோலாலாம்பூர், ஜூலை-1 – கோலாலம்பூர், கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தின் கும்பாபிஷேகப் பெருவிழா வெகு விரைவில் நடைபெறவுள்ள நிலையில், அதற்கான திருப்பணி வேலைகள் தற்போது மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, மூலாலய ஸ்ரீ கணேசப் பெருமானின் பாலாலய வைபவம் எதிர்வரும் ஜூலை 12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை மிகச் சிறப்பாக நடைபெறவுள்ளதாக, ஸ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர், தான் ஸ்ரீ ஆர். நடராஜா கூறினார்.
அன்றைய தினம் காலை 8.00 மணிக்கு விநாயகர் பூஜையுடன் வழிபாடுகள் தொடங்கி, காலை 11.30 மணி முதல் 12.00 மணிக்குள் கன்யா லக்னத்தில் பாலாலய வைபவம் இனிதே நடைபெறும்.
இதனைத் தொடர்ந்து சிறப்பு பூஜை, மகா தீபாராதனை மற்றும் பக்தர்களுக்குப் பிரசாதம் வழங்குதல் ஆகிய நிகழ்வுகளும் இடம்பெறும்.
இந்த மங்களகரமான நிகழ்வில், பக்தர்கள் திரளாகக் கலந்துகொண்டு ஸ்ரீ விநாயகப் பெருமானின் அருளைப் பெற்றுச் செல்லுமாறு தான் ஸ்ரீ நடராஜா அனைவருக்கும் அழைப்பு விடுத்துள்ளார்.
நாட்டில் பிரசித்தி பெற்ற இந்த கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் கோயில்
முழுமையாக கருங்கல்லில் கட்டப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
திருப்பணிக்கு பின் பக்தர்களுக்கு இவ்வாலயம் மிகவும் பிரமாண்டமாக காட்சித் தரும் என்பது திண்ணம்.



