
மலாக்கா, ஜூலை-6-இன்று அதிகாலை மலாக்கா, Kampung Pengkalan Rama Pantai, Jalan Pengkalan-னில் வழிபாட்டுத் தலமொன்றுக்கு அருகே, அடையாளம் தெரியாத கும்பலால் தாக்கப்பட்டு இரு ஆடவர்கள் காயமடைந்தனர். அவர்களில் ஒருவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளது.
அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்த அச்சம்பவத்தில், மோட்டார் சைக்கிளில் அவ்விடத்தை அடைந்த 41 மற்றும் 46 வயதுடைய அவ்விருவரும் அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை எடுத்துச் செல்ல முயற்சித்துக் கொண்டிருந்தனர்.
அச்சமயம், பிளாஸ்டிக் நாற்காலிகள், தலைக்கவசங்கள் மற்றும் மரக்கட்டையுடன் வந்த கும்பல் ஒன்று, திடீரென அவர்கள் மீது தாக்குதல் நடத்தியதாக Melaka Tengah மாவட்டக் காவல் துறையின் இடைக்காலத் தலைவர் Halim Abas தெரிவித்தார்.
அத்தாக்குதலில் ஒருவரின் நெற்றி மற்றும் தாடையில் வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. மற்றொருவருக்கு மண்டை ஓட்டில் மோசமான முறிவு ஏற்பட்டது.
அவ்விருவரும் சிகிச்சைக்காக மலாக்கா மருத்துவமனைக்கு அவசரமாகக் கொண்டுச் செல்லப்பட்டனர். அவர்களில் ஒருவர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
சம்பவம் தொடர்பில் 23 முதல் 34 வயதுக்குட்பட்ட ஐந்து உள்ளூர் ஆண்கள் கைது செய்யப்பட்டனர். மேலும், கைதானவர்களில் இருவருக்கு ஏற்கனவே குற்றப் பின்னணி இருப்பது கண்டறியப்பட்டத்காகவும் Halim குறிப்பிட்டார்.
தாக்குதல் நடத்தியவர்கள் யார் என்று பாதிக்கப்பட்டவர்களுக்குத் தெரியாது என்றும், இச்சம்பவத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார். சந்தேக நபர்கள் ஜூலை 10-ஆம் தேதி வரை ஆறு நாட்களுக்குத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.



