
கோலாலம்பூர், ஜூலை-18 – கோலாலம்பூர், ஸ்தாப்பாக்கில் கல்லூரி மாணவர் ஒருவரை இரும்புத் தடியால் தாக்கிய 39 வயது வெளிநாட்டவர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.
வியாழக்கிழமை பேருந்துக்காகக் காத்திருந்த 20 வயது மாணவர் மீது நடத்தப்பட்ட இந்த வன்முறைத் தாக்குதலை வாங்சா மாஜு போலீஸ் உறுதிப்படுத்தியது.
பாதிக்கப்பட்ட மாணவர் சம்பவம் நடந்த சிறிது நேரத்திலேயே போலீஸில் புகாரளித்தார்.
இதனையடுத்து, வெள்ளிக்கிழமை காலை தாமான் ஸ்தாப்பாக்கில் சாலையோரம் இருந்த சந்தேக நபர் போலீஸாரால் கைதுச் செய்யப்பட்டார்.
தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்டதாகக் கருதப்படும் இரும்பிலான கார் ஜாக் கைப்பிடியையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
சந்தேக நபர் மீது அபாயகரமான ஆயுதத்தைக் கொண்டு காயத்தை ஏற்படுத்தியதன் பேரில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தவிர, அவரிடம் செல்லுபடியாகும் பயண ஆவணங்கள் இல்லை என்பதால், குடிநுழைவுச் சட்டத்தின் கீழும் விசாரணை நடைபெறுகிறது.
சந்தேக நபரை இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தி, தடுப்புக் காவலுக்கான அனுமதியைப் பெற போலீஸார் விண்ணப்பிக்கின்றனர்.
இச்சம்பவம் குறித்து கூடுதல் தகவல் தெரிந்தவர்கள், வங்சா மாஜு மாவட்ட போலீஸ் நிலையத்தையோ அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையோ தொடர்பு கொள்ளுமாறு போலீஸார் கேட்டுக் கொண்டுள்ளனர்.



