
கெடா, ஆகஸ்ட் 27 – கெடா மந்திரி பெசார் சனுசி நோர் கூறிய கருத்துகளுக்கு பதிலளித்த நிதியமைச்சு, மடானி அரசாங்கம் கெடாவில் புதிய சூதாட்ட உரிமங்களையோ, புதிய லாட்டரி அல்லது பந்தயக் கடைகளுக்கான அனுமதிகளையோ வழங்கவில்லை எனத் தெரிவித்துள்ளது.
தற்போது உள்ள உரிமங்கள் மற்றும் அனுமதிகள் 1990-களில் வழங்கப்பட்டவையே என்றும், உரிமம் பெற்ற நிறுவனங்களுக்கு கடுமையான நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு கூறியது. மேலும், சட்டவிரோத மற்றும் இணையவழி சூதாட்டங்களுக்கு எதிரான அமலாக்க நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தது.
2020 முதல் 2022 வரை பாஸ் இடம்பெற்றிருந்த முந்தைய அரசாங்கங்களும் உரிமம் பெற்ற சூதாட்டத்தைத் தடை செய்யவோ, ஏற்கனவே வழங்கப்பட்ட உரிமங்களை ரத்து செய்யவோ நடவடிக்கை எடுக்கவில்லை என அமைச்சு சுட்டிக்காட்டியது.
மடானி அரசாங்கம் சிறப்பு லாட்டரி குலுக்கல்களின் எண்ணிக்கையை ஆண்டுக்கு 22-லிருந்து மீண்டும் 8 ஆகக் குறைத்துள்ளதாகவும் நிதியமைச்சு தெரிவித்துள்ளது



