
கோலாலம்பூர், செப்-02-கோலாலம்பூரில் பிரசித்தி பெற்ற கோர்ட்டுமலைப் பிள்ளையார் ஆலயக் கும்பாபிஷேக நிதி வசூல் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் ஆதாரமற்றவை என கோலாலம்பூர் ஶ்ரீ மகா மாரியம்மன் கோயில் தேவஸ்தானத் தலைவர் Tan Sri R. Nadarajah தெரிவித்திருக்கிறார். அத்தகவல்கள் தம்மையும் ஆலய நிர்வாகத்தையும் குறி வைத்து பரப்பப்படும் அவதூறு என அவர் தெளிவுபடுத்தினார்.
7.8 மில்லியன் அல்லது 8.1 மில்லியன் ரிங்கிட் வசூலிக்கப்பட்டதாகக் கூறப்படுவது முற்றிலும் பொய். கும்பாபிஷேகப் பணிகளுக்காக கோயிலின் சொந்த வைப்பு நிதியில் இருந்து இதுவரை ஒரு வெள்ளிக்கூட எடுக்கப்படவில்லை என அவர் திட்டவட்டமாகக் கூறினார்.
கும்பாபிஷேகம் மூலம் இதுவரை மொத்தம் 5,875,189.46 ரிங்கிட் நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. அதில் பணம் மற்றும் காசோலை மூலம் 4,807,689.46 ரிங்கிட் திரட்டப்பட்டுள்ளது. 1,750 கிராம் தங்கம் சுமார் 1.45 மில்லியன் ரிங்கிட்மதிப்பில் நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. திருப்பணிகளுக்காக 3,494,127.90 ரிங்கிட் செலவிடப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.
10ஆம் தேதி நிறைவடையும் 48 நாள் மண்டலாபிஷேகத்திற்குப் பின்னரே இறுதி கணக்கு விவரங்கள் வெளியிடப்படும். தேவஸ்தானத்தின் கணக்குகள் உள் மற்றும் வெளி கணக்காய்வுகளுக்கு உட்படுத்தப்பட்டு, ஆண்டுக் கூட்டத்தில் முறையாகச் சமர்ப்பிக்கப்படும் என ஆர். நடராஜா தெரிவித்தார். ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளையும் வதந்திகளையும் பரப்புவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரித்தார்.



