
அலோர் காஜா, மே-27 – AMJ எனப்படும் அலோர் காஜா – மலாக்கா தெங்கா – ஜாசின் நெடுஞ்சாலையில் ஓர் ஆடவரின் உயிரைப் பறித்த விபத்தில் சம்பந்தப்பட்ட ‘பிங்க்’ பேருந்து ஓட்டுநர் கைதாகியுள்ளார்.
37 வயது அவ்வாடவரைத் தடுத்து வைக்க அலோர் காஜா நீதிமன்றத்தின் ஆணைப் பெறப்படுமென, மாவட்ட போலீஸ் தலைவர் சூப்பிரிடெண்டன்ட் அஷாரி அபு சமா கூறினார்.
அவர் போதைப்பொருள் எதுவும் உட்கொள்ளவில்லை என்பது பரிசோதனையில் உறுதியானது.
குற்றப் பதிவுகளும் போக்குவரத்துக் குற்றங்களுக்கான சம்மன்களும் அவரிடம் இல்லையென அஷாரி சொன்னார்.
நேற்று மாலை 5 மணியளவில் நிகழ்ந்த அவ்விபத்தில், நின்று நின்று செல்லும் பேருந்தும் மிட்சுபிஷி காரும் சம்பந்தப்பட்டன.
அப்பேருந்து மலாக்கா சென்ட்ரல் பேருந்து முனையத்திலிருந்து AMJ நோக்கியும், 23 வயது Muhammad Aiman Mohd Farid ஒட்டிச் சென்ற கார் ரெம்பியாவிலிருந்தும் வந்துகொண்டிருந்தன.
சம்பவ இடத்தில், சாலையோரமாக காரை அதன் ஓட்டுநர் நிறுத்திய போது, பேருந்து பின்னாலிருந்து மோதியது.
இதனால் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட Aiman, கால்வாயில் விழுந்து தலையில் படுகாயமடைந்தார்.
அங்கேயே அவர் மரணமடைந்ததை மருத்துவக் குழு உறுதிப்படுத்தியது.
காரில் உடனிருந்த 22 Muhammad Hakini Hafiz Baharin முதுகில் காயமடைந்தார்.
பேருந்து ஓட்டுநருக்கும் 53 வயது பெண் பயணிக்கும் காயமேதும் ஏற்படவில்லை.
அப்பேருந்து, காரை மோதும் காட்சிகள் அடங்கிய 2 வீடியோக்கள் முன்னதாக வைரலாகியிருந்தன.