
கோலாலம்பூர், மே-19 – மக்கள் வீடமைப்புப் திட்டங்களில் வாடகைக்கு இருப்போர் DBKL எனப்படும் கோலாலம்பூர் மாநகர மன்றத்திற்கு வைத்துள்ள வாடகை பாக்கி மட்டும் 70 மில்லியன் ரிங்கிட்டாகும்.
மாநகர மேயர் டத்தோ ஸ்ரீ மைமூனா ஷாரிஃப் அந்த அதிர்ச்சித் தகவலை வெளியிட்டார்.
வாடகை பாக்கியால், DBKL-லில் கீழ் உள்ள சமூக வசதிக் கட்டமைப்புகளின் மேலாண்மையும் பராமரிப்பும் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக அவர் ஏமாற்றத்துடன் கூறினார்.
இப்பிரச்னைக்குத் தீர்வாக DBKL பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து பார்த்து விட்டது.
வீடுகளுக்கான தண்ணீர் விநியோகத்தை நிறுத்துவது, நோட்டீஸ் அனுப்புவது, நிதி நிர்வாக ஆலோசனைகளை வழங்குவது, தவணை முறையில் செலுத்தும் சலுகையை வழங்குவது உள்ளிட்டவை அவற்றிலடங்கும்.
ஆனால் ஏராளமான குடியிருப்பாளர்கள் வாடகை செலுத்தாமல் இழுத்தடிக்கின்றனர்.
வாடகைக்கு இருப்பவர்களுக்கு வாங்கும் சக்தி இருந்தால், அவர்களுக்கே வீடுகளை விற்கவும் DBKL முன்வந்துள்ளது என்றார் அவர்.
அவ்வாறு விற்க 2015-ல் தடை இருந்தது.
எனினும் அதனை தாம் மறு ஆய்வு செய்திருப்பதாகவும், உரிய வாங்குநர் இருந்தால்
வீடுகளை அவர்களுக்கே விற்க முடிவுச் செய்யப்பட்டிருப்பதாகவும் மைமூனா சொன்னார்.