Latestமலேசியா

KPKT அமைச்சின் MyKiosk ‘வெள்ளை யானைத்’ திட்டமா? அமைச்சர் ங்கா மறுப்பு

புத்ராஜெயா, மே-8- வீடமைப்பு – ஊராட்சித் துறை அமைச்சான KPKT-யின் MyKiosk, எதற்கும் பயன்படாத ‘வெள்ளை யானைத்’ திட்டம் எனக் கூறப்படுவது உண்மையில்லை.

அதுவோர் அடிப்படையற்றக் குற்றச்சாட்டு என அமைச்சர் ங்கா கோர் மிங் தெளிவுப்படுத்தினார்.

பெரும்பாலான அந்த kiosk விற்பனைக் கூடாரங்கள் நிரப்பப்பட்டு விட்டன; இன்னும் சில கூடாரங்கள் மட்டுமே செயல்படாமல் உள்ளன.

நாடு முழுவதுமுள்ள 7,000 kiosk கூடாரங்களை நிரப்புமாறு உத்தரவுப் பிறப்பிக்கப்பட்டுள்ளது; எனவே இது ‘வெள்ளை யானைத் திட்டம்’ அல்ல என்றார் அவர்.

அங்காடி வியாபாரிகள் குறிப்பாக சாலையோரங்களில் முறையான உரிமம் இல்லாமல் செயல்பட்டு வருவோருக்காக, ஊராட்சி மன்றங்களின் விண்ணப்பங்கள் அடிப்படையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

இந்த MyKiosk கூடாரங்கள் மூலம், முதல் 6 மாதங்களுக்கு இலவச வாடகை அடிப்படையிலும், பின்னர் நாளொன்றுக்கு 10 ரிங்கிட் விகிதத்திலும் அவர்களின் வியாபாரங்களை நாம் ‘சட்டப்பூர்வமாக்குகிறோம்’ என ங்கா கோர் மிங் கூறினார்.

இந்த MyKiosk கூடாரங்கள் பணத்தை விரயமாக்குவதோடு நடைமுறைக்கு ஒத்து வராத திட்டமென, பெர்சாத்து கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் டத்தோ துன் ஃபைசால் இஸ்மாயில் அசிஸ் முன்னதாக சாடியிருந்தார்.

B40 மற்றும் குறு, சிறு, நடுத்தர வியாபாரிகளுக்கு உதவும் பொருட்டு, KPKT அமைச்சு அறிமுகப்படுத்தியதே இந்த MyKiosk திட்டமாகும்.

குறைந்த வாடகையில் அவர்கள் வியாபாரம் செய்வதற்கு சீரான, பாதுகாப்பான மற்றும் வசதியான இடத்தை வழங்குவதே அதன் நோக்கமாகும்.

கடந்தாண்டு டிசம்பர் வரையில், நாடு முழுவதும் 133 ஊராட்சி மன்றங்களில் 7,243 Mykiosk கூடாரங்கள் நிறுவப்பட்டு, இதன் மூலம் 7,000 குடும்பங்கள் தங்களின் வருமானத்தைப் பெறுக்க உதவியது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!