
MACC ‘வர்த்தக மாஃபியா கும்பல்’ குற்றச்சாட்டுக்கு அரசாங்கத்தின் பதில் போதாது – அந்தோணி லோக் கருத்து
கோலாலாம்பூர், பிப்ரவரி-24,
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான MACC அதிகாரிகள் சிலர் “corporate mafia” அல்லது “வர்த்தக மாஃபியா கும்பல்களுடன்” இணைந்து நிறுவனங்களை கைப்பற்றுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்கு அரசாங்கம் அளித்த பதில் போதுமானதல்ல…
DAP பொதுச் செயலாளரும் போக்குவரத்து அமைச்சருமான அந்தோணி லோக் அவ்வாறு கூறியுள்ளார்.
அரசாங்கத்தின் விளக்கம் மக்களுக்குத் திருப்தியளிக்கவில்லை.
எனவே, DAP அமைச்சர்கள் வரும் வெள்ளிக்கிழமை அமைச்சரவை கூட்டத்தில் ஒரு அரச விசாரணை ஆணையத்தை அமைக்க வலியுறுத்துவர் என்றார் அவர்.
MACC மீதான இந்த குற்றச்சாட்டுகள் மிகவும் கடுமையானவை.
அரசாங்கம் இதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல், சுதந்திரமான சுயேட்சை விசாரணை மூலம் உண்மையை வெளிப்படுத்த வேண்டுமென அவர் சொன்னார்.
MACC அதிகாரிகள் சிலர், சோதனை போன்ற அச்சுறுத்தல் நடவடிக்கைகளில் இறங்கி, வணிக நிர்வாகிகள் தங்கள் பங்குகளை விற்க வற்புறுத்தி ‘வர்த்தக மாஃபியா’ கும்பல்களில் ஈடுபட்டுள்ளதாக Bloomberg செய்தி நிறுவனம் முன்னதாக செய்தி வெளியிட்டிருந்தது.
ஆனால், அது உண்மையல்ல என MACC தலைமை ஆணையர் தான் ஸ்ரீ அசாம் பாக்கி திட்டவட்டமாக மறுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.



