
புத்ராஜெயா, ஏப்ரல்-7-MyKad பயன்பாட்டின் மூலம் அரசாங்க மானியங்களைப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை என, தேசியப் பதிவிலாகாவான JPN தெளிவுபடுத்தியுள்ளது.
கிளந்தானில் MyKad தவறாக பயன்படுத்தப்பட்டதாக கூறப்பட்ட விசாரணைத் தொடர்பில் JPN தலைமை இயக்குநர் கூறியிருந்த கருத்துகளுக்குப் பிறகு, இந்த விளக்கம் வெளியிடப்பட்டது.
அவரின் அக்கருத்தானது உண்மையில், ஒருவர் 4 MyKad அட்டைகளைப் பயன்படுத்தி மானிய எரிபொருள் பெற்றதாகக் கூறப்படும் சம்பவத்தை குறிப்பதாகும்.
எனவே, அந்தக் கருத்து மானியங்களைப் பெறுவதிலிருந்து பொது மக்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டதல்ல என JPN, அறிக்கை வாயிலாக விளக்கியது.
விதிமுறைகளுக்கு உட்பட்ட பட்சத்தில், MyKad பயன்பாட்டுக்கு எந்தத் தடையும் இல்லை.
அதே நேரத்தில், பிறர் MyKad அட்டைகளைப் பயன்படுத்துவது அல்லது வைத்திருப்பது சட்டவிரோதமாகும்.
எனவே, பொது மக்கள் தங்களின் MyKad அட்டைகளை, மானிய விலையிலான பெட்ரோலை வாங்குவதது உட்பட எந்தவொரு பரிவர்த்தனைக்கும் பிறரிடம் ஒப்படைக்க வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.



