
ஜோர்ஜ் டவுன், மே 9 – Q Toff பங்கு விண்ணப்பம் சம்பந்தப்பட்ட ஒன்லைன் முதலீட்டுத் திட்டத்தில் தனியார் நிறுவன பெண் குமாஸ்தா ஒருவர் 685,000 ரிங்கிட்டை இழந்தார்.
60 வயதுடைய அந்த குமாஸ்தாவிடமிருந்து புகாரை பெற்றதைத் தொடர்ந்து மோசடி தொடர்பில் குற்றவியல் சட்டத்தின் 420ஆவது விதியின் கீழ் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ ஹம்சா அகமட் தெரிவித்தார்.
குறுகிய காலத்தில் கூடுதல் லாபம் பெறக்கூடிய Q Toff பங்கு முதலீடு தொடர்பில் முகநூல் விளம்பரத்தை கண்டு பாதிக்கப்பட்டவர் பணத்தை பறிகொடுத்துள்ளார்.
WhatsApp மூலம் அறிமுகமான சந்தேகப் பேர்வழியுடன் தொடர்புக் கொண்டதை தொடர்ந்து அந்த குமாஸ்தா Kelab Fortune Plaza என்ற குழுமத்தில் இணைந்து மேலும் விளக்கத்தை பெற்ற பின்னர் அதன் உறுப்பினராக முதலீடு செய்துள்ளார்.
நான்கு வங்கிக் கணக்குகள் மூலமாக 19 முறை 685,000 ரிங்கிட்டை அவர் பட்டுவாடா செய்துள்ளார். தனக்கு லாபம் வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்ட 1.4 மில்லியன் ரிங்கிட்டை மீட்க முயன்றபோது எந்தவொரு பணத்தையும் திரும்பப் பெறுவதற்கு முன்பு, லாபத் தொகையில் 10 விழுக்காடு செலுத்த வேண்டும் என கூறப்பட்டபோதுதான் தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்து அந்த குமாஸ்தா போலீசில் புகார் செய்தார்.
இதனிடையே இல்லாத வேலை வாய்ப்புத் திட்ட மோசடியில் சிக்கி 72 வயதான பல் மருத்துவர் ஒருவர் 300,440 ரிங்கிட்டை இழந்த தகவலையும் ஹம்சா வெளியிட்டார்.