
கோலாலம்பூர், மே-4,
கோலாலம்பூர், புக்கிட் பிந்தாங்கில் நடைபெற்ற Rain Rave நீர் இசை விழாவின் போது, கத்தியைக் காட்டி பொது மக்களை மிரட்டிய 32 வயதுப் பெண்மணி, மனநலப் பரிசோதனைக்காக பேராக், தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள Hospital Bahagia மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளார்.
32 வயது Shannon Anne-Ooi, 30 நாட்களுக்கு மனநலப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என, கோலாலம்பூர் மேஜிஸ்திரேட் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அந்தப் பெண்ணுக்கு நீண்டகாலமாக மனநலப் பாதிப்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதை அடுத்து, இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
பரிசோதனைகள் முடிந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதும், ஜூன் 4-ஆம் தேதி வழக்கு மறுசெவிமெடுப்புக்கு வருமென அறிவிக்கப்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு நிகழ்ந்த அச்சம்பவத்தில், அந்தப் பெண் கையில் கத்தியை ஏந்தி அங்கிருந்தவர்களை மிரட்டியது போன்ற வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவியது.
பின்னர் போலீஸாரிடம் பிடிபட்டு தடுத்து வைக்கப்பட்டவர் இன்று காலை நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.



