
கங்கார், மே-4,
பெர்லிஸ், கங்காரில் உள்ள ஒரு சிறிய கோவிலில் ‘அல்லாஹ்’ என்ற புனித வார்த்தை காணப்பட்ட விவகாரம் தொடர்பாகப் பொது மக்கள் தேவையற்ற யூகங்களையும் சர்ச்சைகளையும் பரப்ப வேண்டாம் என போலீஸ் கேட்டுக் கொண்டுள்ளது.
பெர்லிஸ் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முஹமட் அப்துல் ஹாலிம், இது குறித்து முறையான விசாரணை நடத்த போலீஸாருக்கு அவகாசம் அளிக்குமாறு வலியுறுத்தினார்.
சமூக ஊடகங்களில் வைரலான இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, நேற்று மாலை 3 மணியளவில் 61 வயதுடைய வன்பொருள் கடை உரிமையாளர் ஒருவரைப் போலீஸார் கைதுச் செய்தனர்.
மத உணர்வுகளைப் புண்படுத்தும் நோக்கம் மற்றும் அநாகரிகமாக நடந்துகொண்டது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் அவரிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
சில அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தனிநபர்கள் கங்கார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததைத் தொடர்ந்து இந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.
சம்பந்தப்பட்ட கடை உரிமையாளர் பகிரங்கமாக மன்னிப்புக் கோரியுள்ள போதிலும், இன மற்றும் மத ரீதியிலான பதற்றத்தைத் தவிர்க்கவும், உண்மையான பின்னணியைக் கண்டறியவும் போலீஸார் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
நாட்டின் அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் வகையில் 3R சார்ந்த உணர்ச்சிகரமான தகவல்களைப் பகிர வேண்டாம் எனப் பொது மக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.



