
புத்ராஜெயா, மார்ச்-5-Sumbangan Asas Rahmah அல்லது SARA உதவித் திட்டத்தின் மூலம், இந்த 3 வாரங்களில் 12.5 மில்லியன் மலேசியர்கள் அத்தியாவசிப் பொருட்களை வாங்கியுள்ளனர்.
இது 1 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான நன்மைக்கு சமம் என, பிரதமரும் நிதியமைச்சருமான டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
சிறந்த நிதி நிர்வாகத்தின் வாயிலாக நாட்டின் நிதி மறுசீரமைப்பு மூலம் கிடைத்த சேமிப்பு, SARA திட்டத்தின் வாயிலாக நேரடியாக மக்களிடம் திருப்பி வழங்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.
‘SARA அனைவருக்குமானது’ என்ற கருப்பொருளில் திட்டம் தொடங்கிய முதல் நாளிலேயே விற்பனை 97 மில்லியன் ரிங்கிட்டை எட்டியது; இது கடந்தாண்டு பதிவான 50.7 மில்லியனை விட இருமடங்கு அதிகமாகும்.
கடந்தாண்டு அனுபவங்களைக் கருத்தில் கொண்டு, இவ்வாண்டு கணினி முறை மேம்படுத்தப்பட்டதால், ஒரே நிமிடத்தில் 11,000 பரிவர்த்தனைகள் தாமதமின்றி செயல்படுத்தப்பட்டதையும் அன்வார் சுட்டிக் காட்டினார்.
ஆக அதிகமாக, சபா, பெர்லிஸ், கிளந்தான், லாபுவான், திரங்கானு, கெடா, சரவாக் மற்றும் பஹாங்கில் மக்கள் இந்த உதவியைப் பயன்படுத்தியுள்ளனர்.
தற்போதைக்கு 11,300க்கும் மேற்பட்ட கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்கள் SARA பரிவர்த்தனைகளை ஏற்றுக் கொள்ளும் நிலையில் இவ்வாண்டு இறுதிக்குள் அவ்வெண்ணிக்கையை 20,000-மாக உயர்த்த அரசாங்கம் இலக்குக் கொண்டுள்ளது.



