
லண்டன், மே-21 – பிரிட்டனின் தேசிய அறிவியல் பயிற்சிக் கல்லூரியான Royal Society, மலேசியாவைத் தளமாகக் கொண்ட தனது முதல் உறுப்பினராக ரவிகாதேவி சம்பந்தமூர்த்தியை வரவேற்றுள்ளது.
இவ்வாண்டுக்கான அதன் ஆராய்ச்சியாளர்கள் வரிசையில் AI அதிநவீன தொழில்நுட்பம் தொடங்கி உலகலாய சுகாதாரம் மற்றும் நரம்பியல் வரையிலான பல்வேறு துறைகளைச் சார்ந்தவர்கள் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் மலேசியா, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா, சீனா, சுவிட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்களாவர்.
அவ்வகையில் ஜோகூரில் பிறந்து வளர்ந்து தற்போது சிலாங்கூர் பெட்டாலிங் ஜெயாவில் வசித்து வரும் ரவிகாதேவி உயிர் வேதியல் நிபுணராவார்.
இவ்வாண்டு தனது 70-ஆவது பிறந்த நாளுக்கு 2 நாட்களுக்கு முன்பாக ஜூலை 11-ஆம் தேதி முறைப்படி அவர் Royal Society-யில் இணைகிறார்.
தற்சமயம் MPOB எனப்படும் மலேசிய செம்பனை எண்ணெய் வாரியத்தின் அறிவியல் ஆலோசகராக இருக்கும் ரவிகாதேவி, லண்டன் பல்கலைக்கழகக் கல்லூரியில் உயிர் வேதியியல் துறையில் PhD பட்டம் பெற்றவராவார்.
MPOB தவிர, மலேசிய அறிவியல் அகாடமியின் உயிர் அறிவியல், விவசாயம் மற்றும் சுற்றுச் சூழல் தலைவராகவும் உள்ளார்.
மலேசிய கண்டுபிடிப்பு மற்றும் வடிவமைப்பு வாரியத்தின் அறங்காவலராகவும் ரவிகாதேவி பணியாற்றுகிறார்.
இந்நிலையில் தமக்குக் கிடைத்துள்ள இந்த அங்கீகாரம் ஒரு கூட்டு முயற்சியின் பலன் என அவர் வருணித்தார்.
MPOB-வில் மிகச் சிறந்த குழு தமக்கு உறுதுணையாக இருந்திருப்பதாக அவர் நன்றி பாராட்டினார்.
அறிவியல் கண்டுபிடிப்புகள் தனியாக நடப்பதில்லை; மனிதர்களுக்கும் பூமிக்கும் நன்மையைக் கொண்டு வரக் கூடிய வகையில் அனைத்துலக ஒத்துழைப்பின் வாயிலாக நடப்பவை எனறார் அவர்.
Stephen Hawking, Charles Darwin, Albert Einstein, Subrahmanyan Chandrasekhar போன்ற அறிவியல் சான்றோர்கள் இடம் பெற்ற வரிசையில் ரவிகாதேவியும் இணைவது நமக்கும் நாட்டுக்கும் பெருமை தானே