
பட்டவொர்த், மே-19 – TABIKA Perpaduan பாலர் பள்ளிகள் அனைத்து இனங்களுக்குமானவை.
எனவே, பல்லின பெற்றோர்களும் தங்களது பிள்ளைகளை அப்பாலர் பள்ளிகளுக்கு அனுப்ப ஊக்குவிக்கப்படுகின்றனர்.
தேசிய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டுத் துறையின் தலைமை இயக்குநர் டத்தோ சே ரொஸ்லான் சே டாவுட் அவ்வாறு தெரிவித்துள்ளார்.
சிறு பிராயத்திலிருந்தே பிள்ளைகளிடம் ஒற்றுமையும் ஒருமைப்பாட்டையும் ஊட்டி வளர்க்க, இந்த TABIKA Perpaduan பாலர் பள்ளிகள் பங்காற்றுகின்றன என்றார் அவர்.
கடந்த பிப்ரவரி வரைக்குமான புள்ளிவிவரப்படி, நாடளாவிய நிலையில் உள்ள 34,889 TABIKA Perpaduan பாலர் பள்ளிகளில் 76.89 விழுக்காட்டினர் அல்லது 26,835 மாணவர்கள் மலாய்க்காரர்கள் ஆவர்.
5.6 விழுக்காடு அல்லது 1,939 பேர் என இரண்டாவது இடத்தில் இந்திய மாணவர்களும், 1.3 விழுக்காடு அல்லது 456 பேருடன் சீன மாணவர்கள் மூன்றாம் இடத்திலும் உள்ளனர்.
பல்லின மாணவர்களின் பங்கேற்பு மகிழ்ச்சியளித்தாலும், மற்ற இன மாணவர்களை விட மலாய்க்காரர்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர்.
எனவே, பள்ளி அளவிலேயே ஒருமைப்பாட்டை வளர்க்க, மற்ற இன பெற்றோரும் பிள்ளைகளை TABIKA Perpaduan பாலர் பள்ளிகளுக்கு அனுப்புமாறு அவர் கேட்டுக் கொண்டார்.
பினாங்கு, பட்டவொர்த்தில் மாநில அளவிலான Tabika Perpaduan மற்றும் TASKA Perpaduan பாலர் பள்ளிகளின் ஆசிரியர் தின விழாவில் பங்கேற்று பேசிய போது அவர் அவ்வாறு கூறினார்.