கோலாலம்பூர், பிப் 16 – 2,500 ரிங்கிட் வாங்கிய கடனை திரும்ப செலுத்த தவறியதற்காக மியன்மார் பிரஜை ஒருவரை மற்றொரு மியன்மார் ஆடவன் கொலை செய்தான் . இதன் தொடர்பில் சந்தேகப் பேர்வழி ஒருவன் கைது செய்யப்பட்டதாக செந்தூல் போலீஸ் தலைவர் அஹ்மாட் சுகர்னோ ஜஹாரி தெரிவித்தார். சிலாங்கூர், பந்திங்கிலுள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்து வந்த 24 வயதுடைய நபர் கொலையுண்டவர் என உறுதிப்படுத்தப்பட்டது.
சம்பவம் நடந்த தினத்தன்று தமது நான்கு நண்பர்களுடன் கூடைப்பந்து விளையாடும் இடத்தில் மது அருந்திக்கொண்டிருந்தபோது அவர்களுக்கிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது அந்த நபர் கொலை செய்யப்பட்டதாக முன்னோடி விசாரணையில் தெரியவந்துள்ளது. அன்றைய தினம் அதிகாலை 4 மணியளவில் இரத்த வெள்ளத்தோடு டேசா பார்க் சிட்டியிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அந்த ஆடவன் மரணம் அடைந்ததை அங்குள்ள மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார். அந்த ஆடவனின் கழுத்து, நெஞ்சு மற்றும் கைகள் உட்பட உடலின் பல இடங்களிலும் காயங்கள் காணப்பட்டதாக அஹ்மாட் சுகர்னோ தெரிவித்தார்.