
கோலாலம்பூர், மே-20 – பி.கே.ஆர் உதவித் தலைவர் நூருல் இசா அன்வாரிடம் வெற்று வாக்குறுதிகளோ, வெளிப்படையான காட்டுப் போக்குகளோ எதுவும் கிடையாது.
மாறாக, உண்மையான திட்டமிடலும், ஒட்டுமொத்த மலேசியர்களுக்காக சேவை செய்யும் தீர்மானமும் மட்டுமே இருக்கின்றன.
கடந்த ஒன்றரை ஆண்டுகளாக அருடன் நெருக்கமாக பணியாற்றிய அனுபவத்தில் இவையாவும் தான் நேரில் கண்ட பண்புகள் என, பிரதமரின் சிறப்புப் பணிகளுக்கான அதிகாரி சண்முகம் மூக்கன் புகழாரம் சூட்டியுள்ளார்.
நூருல் இசா இன்று வகிக்கும் இடத்திற்கு வெறுமனே அவர் குடும்பப் பெருமையை மட்டும் சுமந்து வரவில்லை,
மாறாக, சீர்திருத்த இயக்கத்தை உருவாக்கிய அதே இரத்தம், வியர்வை, தியாகங்கள் ஆகியவற்றால் அவர் வடிவமைக்கப்பட்டுள்ளார்; அவ்வியக்கத்தைத் தொடர்ந்து எரியச்செய்யும் சுடராகத் திகழ்கிறார்.
ஜாதி, மதம், அல்லது வர்க்கத்தின் அடிப்படையில் மக்களைப் பிரித்துப் பார்க்காத மனப்போக்கும் அவரிடம் நிறைந்துள்ளது.
அவரது அக்கறை மேலோட்டமானதோ அல்லது தற்காலிகமானதோ அல்ல; மாறாக ஆழமான சிந்தனை, நீண்டகாலத் திட்டமிடல் மற்றும் உண்மையான மாற்றத்தை கொண்டு வர வேண்டிய நோக்கத்திலிருந்து வெளிப்பட்டதாகும் என ஷண்முகம் கூறினார்.
அதன் அடிப்படையில், 13-ஆவது மலேசியத் திட்டத்தில் சேர்க்கக்கூடிய இந்தியர்களுக்கான ஒரு நீண்டகால செயல்திட்டத்தை உருவாக்க முடிவு செய்து, இளைஞர்கள், பெண்கள், கல்வியாளர்கள், அரசு சார இயக்கங்கள், பொருளாதார நிபுணர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் பலருடன் கலந்துரையாடல் நிகழ்வுகளை நடத்தினோம்.
நூருல் இசாவும் அதன் அண்மைய அமர்வில் பங்கேற்று தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டார்.
இது தவிர, மஸ்ஜிட் இந்தியா கோவில் விவகாரத்திற்குப் பிறகு கோவில்கள் மீது வந்த விமர்சனங்கள் மற்றும் இனவாத கருத்துகள் குறித்து அவர் உண்மையாகவே மிகுந்த கவலைக் கொண்டார்.
இது சமாதானமாகவும் மரியாதையுடனும் தீர்க்கப்படவேண்டும் என்பதில் அவர் உறுதியுடன் இருந்தார்.
இந்தச் சிக்கலின் நீண்டகாலத் தீர்வுகளுக்கான வேலைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
எனவே, இந்தியச் சமூகத்தை உயர்த்தவும், முன்னேறச் செய்யவுமான பிரதமரின் இலக்கை அவருடைய சொந்த மகளைத் தவிர வேறு யாரால் நன்கு புரிந்துகொள்ள முடியும்? என சண்முகம் கேள்வி எழுப்பினார்.
வரும் கட்சித் தேர்தலில் நூருல் இசா , டத்தோ ஸ்ரீ ரஃபிசி ரம்லியை எதிர்த்து துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.