ஈப்போ, ஜன 29 – ஒற்றுமை அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கான தங்களது வாக்குறுதி தோல்வி கண்டதால் பெரிக்காத்தான் நேசனலின் அதிகமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் அந்த கூட்டணியை கைவிடுவார்கள் என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்திருக்கிறார். அரசாங்கத்தை கவிழ்ப்பதற்கு பெரிக்காத்தான் நேசனல் கூட்டணி முயன்ற போதிலும் அந்த முயற்சி வெற்றி பெறாததால் அவர்களது நம்பிக்கை பாதியிலேயே சிதைந்தது என அவர் கூறினார். பொய்யான வாக்குறுதிகளால் மேலும் அதிகமான எம்.பிக்களை பெரிக்காத்தான் இழக்கக்கூடும் என தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார். ஒருவர்பின் ஒருவராக அந்த கூட்டணியிலிருந்து அவர்கள் வெளியேறுவார்கள் என பேரா ஒற்றுமை அரசாங்கத்தின் மாநாட்டை முடித்து வைத்து உரையாற்றியபோது அன்வார் கூறினார்.
அரசாங்கத்தை கவிழ்க்கும் பெரிக்காத்தான் முயற்சியை ஒரு விவகாரமாக அமைச்சரவை கருதவில்லை. இதுவொரு பிரச்சனை இல்லையென்று தாம் நம்பியதாகவும் எதிர்க்கட்சிதான் இந்த அனுமானத்தை கொண்டிருந்ததாகவும் அன்வார் தெரிவித்தார். இன உணர்வுகளையும் எதிர்க்கட்சி எழுப்ப முயன்ற போதிலும் ஒற்றுமை அரசாங்கம் அதனையும் வெற்றிகரமாக தடுத்துவிட்டதாக அவர் கூறினார்.