கோலாலம்பூர், டிசம்பர் 12 – சிலாங்கூர் மந்திரி பெசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரியின் பத்திரிக்கை உதவியாளர் ஜே ஜே டெனிஸ்சுக்கு எதிராக இரு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
கடந்தாண்டு, மலாக்கா ஆளுனர் அலி ருஸ்தாமை விமர்சிக்கும் வகையில், X சமூக ஊடகத்தில் பதிவிட்ட கருத்து தொடர்பில் டெனிஸ் அந்த குற்றச்சாட்டுகளை எதிர்நோக்கியுள்ளார்.
வரும் வியாழக்கிழமை, மலாக்கா, அலோர் காஜா மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில், குற்றவியல் சட்டம் மற்றும் தொடர்பு பல்லூடக சட்டங்களின் கீழ் தமக்கு எதிராக குற்றம்சாட்டப்படலாம் என இன்று காலை தனது X பதிவு வாயிலாக டென்னிஸ் கோடிகாட்டியுள்ளார்.
அந்த பதிவு வெளியிடப்பட்டு ஓராண்டுக்கும் மேலாகிவிட்ட போதிலும், தமக்கு எதிராக அலோர் காஜா நீதிமன்றத்தில் குற்றம்சாட்டப்படவிருப்பதை, தற்போது தான் போலீசார் தம்மிடம் தெரிவித்ததாகவும் அவர் பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, சிலாங்கூரிலுள்ள உணவகம் ஒன்றில், அலி ருஸ்தாம் தனது குடும்பத்தாருடன் தனிப்பட்ட இரவு உணவு நிகழ்ச்சியில் கலந்த கொள்ள சென்ற போது, அவருக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு படையின் வாகன அணிவகுப்பு குறித்து டென்னிஸ் அந்த பதிவு வாயிலாக கேள்வி எழுப்பி இருந்தார்.
குறிப்பாக, பெட்டாலிங் ஜெயாவிலுள்ள, ஸ்பிரிண்ட் நெடுஞ்சாலையில் வாகனங்கள் தடை செய்யப்பட்டது குறித்தும், அந்த பாதுகாப்பு படையின் திடீரென ‘உ’ வளைவு எடுத்தது குறித்தும் அவர் அதிருப்தியை வெளிப்படுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.