கோலாலம்பூர், மார்ச் 22 – ஒரு தட்டு சோறு அல்லது சாதத்தின் விலை வெறும் 38 சென் மட்டுமே என மதிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், உணவு விநியோக செயலிகளில், ஒரு தட்டு வெள்ளை சாதம் மூன்று ரிங்கிட் 50 சென் அல்லது 300 விழுக்காடு அதிக விலையில் விற்கப்படுகிறது.
இன்று காலை, கிராப் உணவு விநியோக செயலியில் அதனை தாம் நேரடியாக கண்டறிந்ததை, நெல் மற்றும் அரிசி கண்காணிப்பு இயக்குனர் ஜெனரல் டத்தோ அஸ்மான் மாமுட் உறுதிப்படுத்தியுள்ளார்.
பத்து கிலோகிராம் உள்நாட்டு அரிசி 38 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் வேளை ; அதனை கொண்டு சுமார் நூறு தட்டு உணவுகளை தயாரிக்க முடியும்.
அந்த கணிப்பின் படி, ஒரு தட்டு சாதம் அல்லது சேற்றின் விலை வெறும் 38 சென் மட்டுமே ஆகும்.
ஆனால், மூன்று ரிங்கிட் 50 சென் அல்லது 300 விழுக்காட்டு கூடுதல் விலையில் அது விற்கப்படுவதை டத்தோ அஸ்மான் மாமுட் சுட்டிக் காட்டினார்.
அரிசி விலை குறைந்துள்ளது. சீனி விலை கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. கோழி விலையும் இறக்கம் கண்டுள்ளது. எனினும், உணவு விலை மட்டும் உயர்ந்துள்ளது என குறிப்பிட்டிருந்த தனது நண்பர் ஒருவரின் பதிவை சுட்டிக்காட்டி, அமலாக்க மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் அதிகரிக்கப்பட வேண்டுமென நேற்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உத்தரவிட்டிருந்தார்.
அதனால், வியாபாரிகள் அதிக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக, உணவுப் பொருட்கள் குறிப்பாக சாதத்தின் விலையை விருப்பத்திற்கு உயர்த்த வேண்டாம் என அஜ்மான் நினைவுறுத்தியுள்ளார்.