கோலாலம்பூர், பிப் 8 – காஜாங் கிராண்ட் சாகா நெடுஞ்சாலையில் மேடான் மஸ்ரியா வெளியேறும் இடத்திலுள்ள சமிக்ஞை விளக்கு பகுதியில் ஒரு லோரியும் நான்கு கார்களும் சம்பந்தப்பட்ட விபத்தில் இருவர் மரணம் அடைந்தனர்.
சுங்கை பெசி-உலு கெலாங் (SUKE ) நெடுஞ்சாலையிலிருந்து பிளாசா டோல் பத்து 9-தை நோக்கி சென்று கொண்டிருந்த லோரி மேடான் மஸ்ரியா சாலை சந்திப்பு எச்சரிக்கை விளக்கு பகுதியில் பிரேக் செயல் இழந்ததால் தனக்கு முன்னால் இருந்த நான்கு வாகனங்களை மோதியபின் கவிழ்ந்தது. இதனால் விபத்து நிகழ்ந்த இடத்திலேயே புரோட்டோன் சாகா ஓட்டுனர் இறந்த வேளையில் அதிலிருந்த பயணி மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்டபோது உயிரிழந்ததாக காஜாங் போலீஸ் தலைவர் முகமட் ஸைய்ட் ஹாசன் தெரிவித்தார். இறந்தவர்களில் 50 வயதுக்குட்பட்ட ஆடவரும் 60 வயதுடைய பெண்ணும் அடங்குவர். இந்த விபத்தில் இதர மூன்று கார்களின் ஓட்டுனர்கள் காயம் அடையவில்லை. 40 வயதுடைய லோரி ஓட்டுனர் சொற்ப காயத்திற்கு உள்ளானார். விசாரணைக்காக அவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என முகமட் ஸைய்ட் கூறினார்.