கோலாலம்பூர், டிச 17 – அதி வேகமாக மாறிவரும் கால சூழலுக்கு ஏற்ப நம் மாணவர்களும் ஆசிரியர்களும் எப்படியெல்லாம் தங்களை தயார்படுத்திக் கொள்வது தொடர்பில் இந்தியாவைச் சேர்ந்த கல்வி நிபுணர்கள் ஒத்துழைப்பில் ஏம்ஸ்ட் ‘AIMST’ பல்கலைக்கழகம் மலேசிய இந்தியர்களுக்கான கல்வி கொள்கை வரைவை மேற்கொள்ளவுள்ளதாக ம.இ.கா தேசியத்தலைவர் டான் ஶ்ரீ விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
பெங்களூர் பல்கலைக்கழக கல்வி நிபுணர்களுடன் முன்னெடுக்கவுள்ள அந்த கல்வி கொள்கை வரைவிற்கான தரவுகளை ஏம்ஸ்ட் வழங்கும் என்று
நேற்றைய ம.இ.கா மத்திய செயலவைக் கூட்டத்திற்கு பின்
விக்னேஸ்வரன் கூறினார்.
இந்திய மாணவர்கள் ஆரம்ப, இடைநிலைப்பள்ளி மற்றும் உயர்கல்விகூடங்களில் உருமாற்றத்திற்கு தேவையான திறன்கள் மற்றும் பண்புகளை வளர்த்துக் கொள்வதோடு எதிர்கால வாய்ப்புகளை அறிந்து அதற்கேற்ப எவ்வாறு தங்களை தயார்படுத்த கொள்ள வேண்டும் என்பதை இந்த கல்வி கொள்கை உள்ளடக்கியிருக்கும்.
அதற்கேற்ப ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான பயிற்சிகளும் வழங்கப்பட்டு இந்நாட்டு இந்திய சமூகம் கல்வி வழி உருமாற்றத்தை காண்பதற்கான அடுத்தக்கட்ட முக்கிய முன்னெடுப்பாக இது அமையும் என்றார் விக்னேஸ்வரன்.