கோலாலம்பூர், ஜன 9 – சபாவில் டிசம்பர் 29 ஆம் தேதியன்று முறியடிக்கப்பட்ட போதைப் பொருள் விநியோக கும்பலுக்கு முக்கிய உதவியாளராக இருந்து வந்த அமலாக்க நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டதை போலீஸ் படை துணைத் தலைவர் அயோப் கான் மைடின் பிச்சை உறுதிப்படுத்தினார். 43 வயதுடைய அந்த அதிகாரி கிள்ளான் பள்ளாத்தாக்கிற்கு மாற்றலாகுவதற்கு முன் சபாவில் பணியாற்றி வந்ததாக அவர் தெரிவித்தார். பாதுகாப்பு குற்றங்களுக்கான 2012 ஆம் ஆண்டின் சிறப்பு சட்டத்தின்கீழ் அந்த அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். இதுவரை இந்த சட்டத்தின் கீழ் 11 பேர் கைது செய்யப்பட்டதாக புக்கிட் அமானில் நடைபெற்ற செய்தியாளர் கூட்டத்தில் அயோப் கான் தெரிவித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் மேலும் பலர் கைது செய்யப்படலாம் என்பதை அயோப் கான் மறுக்கவில்லை. மொத்தம் 420,000 ரிங்கிடைக் கொண்ட 22 வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதோடு 6.6மில்லியன் ரிங்கிட் மதிப்புடைய 18 ஆடம்பர வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அக்கும்பலிடமிருந்து 35,000 ரிங்கிட் ரொக்கம், நகைகள் மற்றும் 100,000 ரிங்கிட் மதிப்புள்ள ரோலக்ஸ் கைக்கடிகாரமும் பறிமுதல் செய்யப்பட்டது. கடந்த மாத இறுதியில் சபாவிலுள்ள பல அரசு சார்பு நிறுவனங்களுக்கு புரவலராக இருந்த டத்தோ பிரமுகரும் கைது செய்யப்பட்டதாகவும் அவர் சபாவில் மிகப்பெரிய போதைக் பொருள் கும்பலுக்கு முக்கிய நபராக செயல்பட்டு வந்தவர் என்றும் அயோப் கான் தெரிவித்தார்