கோலாலம்பூர், நவ 25 – கடந்த நவம்பர் 23ஆம் திகதி பினாங்கு கெப்பாள பாத்தாஸில் நிகழ்ந்த தேசிய நிலையிலான செந்தமிழ் விழாவில் தமிழ் வாழ்த்து பாடல் இடம்பெற மறுத்திருப்பது தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும் என கல்வி அமைச்சரை வலியுறுத்தி கடிதம் எழுதியிருக்கின்றார் ம.இ.கா-வின் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஶ்ரீ சரவணன்.
தமிழ் வாழ்த்துப் பாடல் பல காலமாகவே நிகழ்ச்சிகளில் பாடப்பட்டு வருவதாகவும் தமிழ் இலக்கியத்தின் மேன்மையை வலியுறுத்துவதோடு தமிழ் மீதான ஆர்வத்தை தூண்டி தமிழ் வாசிப்பினை அதிகரிப்பதே அதன் நோக்கம் என்றும் அவர் கூறினார். அதே சமயத்தில் நல்ல பண்பு நலன்களை விதைப்பதும் தமிழின் அழகை பறைசாற்றுவதும் அதன் நோக்கம் என்றும் அவர் விவரித்தார்.
பாடல் ரத்து செய்யப்பட்ட விவகாரம் தொடர்பில் உடனடி விசாரணை மேற்கொண்டு அவசரப் பட்டு அம்முடிவை எடுத்த அதிகாரியின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் கல்வி அமைச்சர் பட்லினா சீடேக்கை அவர் கேட்டுக் கொண்டார்.