கோலாலம்பூர், ஜன 22 – மேலவை தலைவர் பதவி காலியானதை பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் உறுதிப்படுத்தியிருக்கிறார். சரவா ஆளுநர் பதவியை ஏற்பதற்காக மேலவை தலைவர் பதவியிலிருந்து வான் ஜுனைடி துவாங்கு ஜாபர் விலகிவிட்டதாக பல்வேறு ஊடகங்கள் செய்தி வெளியிட்டன. ‘Dewan Negara’ அல்லது மேலவையின் புதிய தலைவரை நியமனம் செய்வதற்காக ஒற்றுமை அரசாங்கத்தின் செயலகம் இன்றிரவு கூடவிருப்பதாக அன்வார் இன்று மலாயா பல்கலைக்கழகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அதோடு சரவாவின் புதிய கவர்னர் இரண்டொரு நாளில் அறிவிக்கப்படுவார் என்றும் அவர் கூறினார்.
33 ஆண்டுகளுக்குப் பிறகு சரவா முதலமைச்சர் பதவியிலிருந்து 2014ஆம் ஆண்டு விலகியது முதல் சரவா ஆளுநராக அப்துல் தாயிப் மஹ்மூத் இருந்து வருகிறார். சட்டத்துறையின் முன்னாள் அமைச்சருமான வான் ஜுனைடி கடந்த ஜூன் மாதம் ரைஸ் யாதிமிற்கு பதில் மேலவை தலைவராக நியமிக்கப்பட்டார்.