
வாஷிங்டன், மே-31 – அமெரிக்க அதிபர் டோனல்ட் டிரம்பின் நெருங்கிய ஆலோசகர்களில் ஒருவராகப் பணியாற்றியபோது இலோன் மாஸ்க் அதிக அளவில் போதைப்பொருள் உட்கொண்டதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.
அவர் அடிக்கடி ketamine உட்கொண்டதால் சிறுநீர்ப்பை பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளன; அதோடு தினமும் சுமார் 20 மாத்திரைகளுடனேயே அவர் பயணம் செய்து வந்ததாக, நியூ யோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.
உலக மகா கோடீஸ்வரரான இலோன் மாஸ்க், திடீரென அரசியலில் படுவேகமாக முக்கியத்துவம் பெற்றபோது ketamine , ecstasy மற்றும் psychedelic போதை மாத்திரைகளைத் தவறாமல் உட்கொண்டதாக, அவரது செயல்பாடுகளை நன்கு அறிந்த வட்டாரங்கள் நியூ யோர்க் டைம்ஸிடம் தெரிவித்தன.
டிரம்பின் அதிபர் தேர்தல் பிரச்சாரத்திற்கு 275 மில்லியன் டாலர்களை நன்கொடையாக அள்ளிக் கொடுத்த போதே, இலோன் மாஸ்க்கின் போதைப்பொருள் பயன்பாடு தீவிரமடைந்துள்ளது.
அந்த நன்கொடைக்குக் கைமாறாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு DOG எனப்படும் அரசாங்க செயல்திறன் துறையை வழிநடத்தும் வாய்ப்பையும் அதன் மூலம் அமைச்சர்களுக்கு நிகரான அதிகாரத்தோடு இந்த 5 மாதங்களாக இலோன் மாஸ்க் வலம் வந்ததும் ஊரறிந்த இரகசியமாகும்.
என்றாலும், வெள்ளை மாளிகையில் இருந்தபோது, குறிப்பாக அதிமுக்கியத்துவம் வாய்ந்த உயர் மட்டக் கூட்டங்களின் போது அவர் போதைப்பொருள் உட்கொண்டிருந்தாரா என்பது தெரியவில்லை.
இது குறித்து கேட்ட போது, வெள்ளை மாளிகைப் பேச்சாளர் கருத்துரைக்க மறுத்து விட்டார்.
மாறாக, ஆண்டுக்கணக்கில் அரசியலில் இருக்கும் ஏராளமான தலைவர்களை விட, அமெரிக்க மக்களுக்கு இலோன் மாஸ்க் நிறையவே நன்மைச் செய்துள்ளார் என அவர் புகழாரம் சூட்டினார்.
அதிபர் தேர்தலுக்கு முன்பும் பின்பும் டிரம்பின் வலது கரமாக வலம் வந்த இலோன் மாஸ்க், டிரம்ப் நிர்வாகத்திலிருந்து விலகுவதாக புதன்கிழமை அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
அதற்கு அவர் காரணமேதும் கூறா விட்டாலும், வரிச் சட்டம் தொடர்பில் டிரம்ப்புடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடே விலகலுக்குக் காரணமென தகவலறிந்த வட்டாரங்கள் கூறின.
பதவி விலகல் குறித்து டிரம்புடன் கலந்துபேசாமல், மூத்த அதிகாரிகள் மட்டத்திலேயே அனைத்தையும் பேசி முடித்து விட்டு இலோன் மாஸ்க் நடையைக் கட்டியதாகவும் கூறப்படுகிறது.