
விழுப்புரம், அக்டோபர்-28, அரசியல்வாதியாக அவதாரம் எடுத்துள்ள பிரபல தமிழ்த் திரைப்பட நடிகர் விஜய், தனது முதல் அரசியல் மாநாட்டை பிரமாண்டமாக நடத்திக் காட்டி ஆச்சரியமூட்டியுள்ளார்.
தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டத்தின் விக்ரவாண்டியில் லட்சக்கணக்கான தொண்டர்கள் முன்னிலையில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் (த.வெ.க) முதல் மாநாடு சனிக்கிழமை நடைபெற்றது.
100 அடி உயரத்தில் கட்சிக் கொடியேற்றி வைத்த விஜய், த.வெ.க கட்சியின் கொள்கைகளையும் தொண்டர்களுக்கு அறிவித்தார்.
ஊழலற்ற ஆட்சி, தீண்டாமை ஒழிப்பு, சமத்துவம் ஆகிய முக்கியக் கொள்கைகளில் த.வெ.க பயணிக்கும்.
இரு மொழிக் கொள்கை, போதைப்பொருள் இல்லாத தமிழகம், மாநில தன்னாட்சி உள்ளிட்டவற்றையும் விஜய் வலியுறுத்தினார்.
2026 தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஆட்சியைப் பிடிப்பதே குறிக்கோள் என்பதை தனதுரையில் கோடிகாட்டிய விஜய், ஆளும் தி.மு.க வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படையாக எடுத்து வியப்பை ஏற்படுத்தினார்.
தி.மு.கவின் பணபலம் மற்றும் படைபலத்துடன் தாம் நேரடி மோதலுக்கு தயாரென்பதை அவர் சொல்லாமல் சொல்லி விட்டார்.
அதே சமயம், தனது தலைமையை ஏற்று கூட்டணிக்கு வருவோருக்கு, ஆட்சியில் பங்குத் தரப்படுமென்றும் அவர் உறுதியளித்தார்.
இவ்வேளையில், த.வெ.க மாநாட்டில் பங்கேற்பதற்காக சனிக்கிழமை காலை முதலே கொளுத்தும் வெயிலில் மாநாட்டுத் திடலில் குழுமியிருந்த தொண்டர்களில் 90 பேர் மயங்கி விழுந்தனர்.
அவர்களில் ஒருவர் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.