ஷா அலாம், ஜன 20 – ஷா அலாமில் ஒரு பெண்ணின் வீட்டின் முன் கொள்ளையடித்த பின் கைது செய்யப்பட்ட இரண்டு சந்தேக நபர்களில் 25 குற்றச் செயல்களில் சம்பந்தப்பட்ட ஆடவனும் ஒருவன் என போலீசார் தெரிவித்தனர். காலை 6.30 மணியளவில் நடந்த இந்தச் சம்பவத்தில் ஜாலான் இந்தான் பத்து 3-வில் இரண்டு மோட்டார் சைக்கிள்களில் வந்த நான்கு ஆடவர்கள் ஒரு பெண்ணின் கழுத்தில் அணிந்திருந்த நெக்லசை அபகறித்துக்கொண்டு தப்பியோடியதாக சுபாங் ஜெயா போலீஸ் தலைவர் ACP வான் அஸ்லான் தெரிவித்தார்.
சம்பவத்தைப் பார்த்த பாதிக்கப்பட்டவரின் மகன், பின்னர் தனது மோட்டார் சைக்கிளில் துரத்திச் சென்று, பொதுமக்களின் உதவியுடன் கூட்டரசு நெடுஞ்சாலைக்கு அருகிலுள்ள ஜாலான் உத்தாராவில் 33 வயது சந்தேக நபர் ஒருவரைப் பிடித்தார். விசாரணையில், அந்த நபர் 25 குற்றங்களில் ஈடுபட்டுள்ளார் என தெரிய வந்ததோடு அவர் போலீசாரின் தேடப்படும் பட்டியலில் இருப்பதும் தெரியவந்தது. அந்த சந்தேக நபரிடமிருந்து 3,000 ரிங்கிட் மதிப்புள்ள திருடப்பட்ட நகையையும் போலீசார் கண்டுப் பிடித்தனர் என ACP வான் அஸ்லான் கூறினார். அவனிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையைத் தொடர்ந்து 30 வயதுடைய மற்றொரு ஆடவன் கைது செய்யப்பட்டான். முதல் நபர் ஷாபு போதைப் பொருள் பயன்படுத்தியுள்ளான், குற்றவியல் சட்டத்தின் 395ஆவது பிரிவின் கிழ் கும்பலாக சேர்ந்து கொள்ளையிட்டதாக அவன் மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இரண்டவாது நபர் இம்மாதம் 23ஆம் தேதி வரை தடுத்து வைக்கப்பட்டுள்ளான். தப்பியோடிய மேலும் இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.