கோலாலம்பூர், மார்ச் 25 – தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு ஏஜென்சி ‘ADKK’ கீழ் அங்கிகரிக்கப்பட்ட ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில், சிகிச்சைக்காக சென்றவர்கள் அடித்து துன்புறுத்தப்பட்டதாக வழங்கப்பட்ட ஐந்து புகார்களைத் தொடர்ந்து ஏன் அரசாங்கம் அமைதியாக இருக்கிறது என அரசு சாரா இயக்கங்கள் இன்று கேள்விகளை முன்வைத்துள்ளன.
இது குறித்து தமிழர் குரல் மன்றத்தின் தலைவர் டேவிட் மார்ஷல் கூறுகையில், ‘இதுவரை அந்த போதைப்பொருள் மையம் தொடர்பாக எந்த அதிகாரப்பூர்வமான அறிக்கையும் வெளியிடவில்லை. மேலும், அந்த மையம் இன்னமும் வழக்கம் போல் இயங்குகிறது’ என்று தெரிவித்தார்.
இதுவரை அந்த போதை மறுவாழ்வு மையத்திலிருந்து 18 பேர் சித்திரவதையிலிருந்து தப்பியுள்ளனர் இன்னமும் பலர் அங்கு பூட்டப்பட்டுள்ளனர் என கூறப்படுகிறது.
இந்நிலையில், ஏன் இந்த வழக்கு தொடர்பாக உள்துறை அமைச்சு உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மலேசிய உரிமை கட்சியின் தலைவர் பேராசிரியர் டாக்டர் ப. இராமசாமி கேள்வி எழுப்பினார்.
இதனிடையே இந்த மையத்தில் அனுமதிக்கப்பட்டு பாதிக்கப்பட்ட ஐவர் இன்றைய செய்தியாளர் சந்திப்பில் பங்கெடுத்து, அவர்களின் கசப்பான அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
முன்னதாக, 37 வயது இளைஞர் ஒருவர் Lenggeng Negeri Sembilan-ல் அமைந்துள்ள அந்த மையத்தில் கொடுமை படுத்தப்பட்டதாக வழங்கிய புகார் தொடர்பில் அந்த மையத்தைச் சேர்ந்த இருவர் நீலாய் காவல்துறைத் தலைவர் அப்துல் மாலிக் ஹாசிம் தலைமையில் கைது செய்யப்பட்டனர்.