கோலாலம்பூர், மார்ச் 31 – பிரபல மசாலைத் தூள் தயாரிப்பு நிறுவனமான அழகப்பாஸ் மாவு மில், தனது ஹலால் சான்றிதழ் விண்ணப்பத்தில் வெற்றியடைந்திருக்கிறது.
ஹலால் சான்றிதழ் கோரி அழகப்பாஸ் செய்திருந்த விண்ணப்பத்தை, மார்ச் 25-ஆம் தேதி கூடிய மலேசிய ஹலால் சான்றிதழ் நடுவர்களின் பினாங்குக் கிளையின் செயற்குழு கூட்டம் ஏற்றுக் கொண்டிருக்கிறது.
விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டிருப்பதைத் தெரிவிக்கும் அதிகாரப்பூர்வக் கடிதம், அழகப்பாஸ் நிறுவனத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.
அதனை அழகப்பாஸ் மாவு மில்லும், தனது facebook-கில் பகிர்ந்து வாடிக்கையாளர்களுக்குத் தெரியப்படுத்தியுள்ளது.
ஹலால் சான்றிதழ் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டு, அது தற்போது அச்சடிக்கப்படும் கட்டத்தில் இருக்கிறது; மலேசிய இஸ்லாமிய மேம்பாட்டுத் துறை JAKIM-மிடம் இருந்து அச்சான்றிதழ் பெறப்பட்ட கையோடு, அழகப்பாசுக்குத் தெரிவிக்கப்படுமென்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மலேசிய ஹலால் அதிகாரப்பூர்வ இணைய அகப்பக்கத்தில் வணக்கம் மலேசியா பரிசோதித்ததில், அழகப்பாஸ் மாவு மில்லுக்கு ஹலால் சான்றிதழ் கிடைத்திருப்பது உறுதிச் செய்யப்பட்டுள்ளது.
தங்களின் ஹலால் சான்றிதழ் மீட்டுக் கொள்ளப்பட்டதற்கு, மூலப் பொருட்களோ அல்லது ஹலால் அல்லாத பொருட்கள் கலக்கப்பட்டதோ காரணமல்ல; அதே சமயம், சுகாதார பிரச்னையும் பெரிதாக எதுவும் எழவில்லை என அழகப்பாஸ் முன்னதாக கூறியிருந்தது.
மாறாக, தொழிலாளர் பற்றாக்குறை தொடர்பான சிறிய தொழில்நுட்ப விஷயம் காரணமாகவே JAKIM அச்சான்றிதழை மீட்டுக் கொண்டதாக அழகப்பாஸ் மாவு மில் தெளிவுப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.