சென்னை , டிச 4 – இந்தியாவில் தமிழ் நாட்டில் மிச்சாங் புயல் சென்னையை நெருங்கி வருவதால் பல இடங்களில் கடுமையான காற்றுடன் கனத்த மழை பெய்கிறது. புயலின் பாதிப்பை எதிர்நோக்கும் வகையில் இன்று தமிழகத்தில் பொது விடுமுறையை தமிழக அரசு அறிவித்துள்ளது. தற்போது தென்மேற்கு வங்கக் கடலில் நிலைகொண்டுள்ள இந்த புயல், தொடர்ந்து வடமேற்கு திசையில் நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, இன்று மதியம் தெற்கு ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய வட தமிழக கடற்கரையை ஒட்டி மேற்கு மத்திய வங்கக்கடலை அடைய வாய்ப்புள்ளது. சென்னை, திருவள்ளூர் , காஞ்சிபுரம்,செங்கல்பட்டு உட்பட பல மாவட்டங்களில் நேற்றிரவு முதல் கனமழை காரணமாக ரெயில் தண்டவாளங்களை மழை வெள்ளம் சூழ்ந்துள்ளது. இதனால் சென்னை புறநகர் மின்சார ரெயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. காற்று மற்றும் மழையின் வேகம் அதிகமாக இருப்பதால் ரயில்களை இயக்க முடியாத நிலை ஏற்பட்டது. புயல் முன்னெச்சரிக்கை காரணமாக கோவை மற்றும் பெங்களூர் செல்லக்கூடிய ஆறு விரைவு ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
இன்று தமிழகத்தில் பொது விடுமுறை வழங்கப்பட்ட போதிலும் போலீஸ், தீயணைப்பு சேவை, உள்ளாட்சி அமைப்புகள் உட்பட அத்தியாவசிய சேவைகள் வழக்கம்போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பால் மற்றும் நீர் விநியோகம், மருத்துவமனைகள், மருந்துக் கடைகள் , மின்சாரம், போக்குவரத்து, பெரோல் நிலையங்கள், உணவகங்கள் ஆகியவரை திறக்கப்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. பேரிடர் மீட்பு, நிவாரணம் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அலுவலகங்களின் அத்தியாவசிய சேவைகளும் வழக்கம் போல் செயல்படும். வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள மிச்சாங் புயல் செவ்வாய்க்கிழமை காலை மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.