கோலாலம்பூர், மார்ச் 18 – காரில் இருந்து இறங்கிய 15 நிமிடங்களுக்குப் பிறகே காரினுள் குழந்தையை மறந்து விட்டிருப்பதை உணர்ந்து தாய் பதறியடித்து ஓடும் காட்சிகள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
எனினும், அச்சம்பவம் எங்கே எப்போது நடந்தது போன்ற விவரங்கள் இல்லை.
1 நிமிடம் 42 வினாடி நீளம் கொண்ட அவ்வீடியோவில், திடீரென வீட்டுக்குள் இருந்து தாயும், குடும்ப உறுப்பினர்களும் பதறி அடித்துக் கொண்டு வெளியே ஓடுவது தெரிகிறது.
ஓடியவர்கள் நேராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரை திறந்து பின்னால் இருக்கையில் தூங்கிக் கொண்டிருந்தக் குழந்தையை வெளியே தூக்கி வருகின்றனர்.
நல்ல வேளையாக குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை அறிந்து, அவர்கள் பெருமூச்சு விடுவதுடன் அந்த CCTV காட்சி நிறைவடைகிறது.
வீடியோவைப் பார்த்த நெட்டிசன்கள், குழந்தைக்கு ஒன்றும் ஆகவில்லை என்பதை அறிந்து நிம்மதியடைந்தாலும், எத்தனை தடவை சொன்னாலும் திருந்த மாட்டீர்களா என கடிந்தும் கொண்டனர்.
காரில் இருந்து வெளியேறும் முன், குழந்தைகள் இருக்கிறார்களா இல்லையா என்பதை உறுதிச் செய்துக் கொண்டால் தான் என்ன என அவர்கள் அக்கறையோடு கேள்வி எழுப்பினர்.