
வாஷிங்டன், ஜூன்-1 – கடந்தாண்டு அமெரிக்க அதிபர் தேர்தல் பிரச்சாரங்களின் போது katamine உள்ளிட்ட போதைப்பொருள் பயன்பாட்டில் தாம் மூழ்கிக்கிடந்ததாகக் கூறப்படுவதை, உலக மகா கோடீஸ்வரர் இலோன் மாஸ்க் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.
“நியூ யோர்க் டைம்ஸ் வெளியிட்ட செய்தி ஒரு கட்டுக் கதை” என தனது X தளத்தில் அவர் பதிவிட்டார்.
“சில வருடங்களுக்கு முன்பு நான் ஒரு மருந்தாக ketamine-னை முயற்சித்தேன்; அதனை அப்போதே X தளத்தில் தைரியமாக சொன்னவன் நான்; எனவே இப்போது வெளியாகியிருப்பது ஒரு செய்தியே அல்ல” எனக் கூறிய இலோன் மாஸ்க், ஒரு பாரமான சூழல் அல்லது பெரும் மன உளைச்சலில் இருந்து வெளியேற இது உதவுகிறது; ஆனால் அதன் பிறகு அதை தான் எடுத்துக்கொள்ளவில்லை என்றார்.
இவ்வேளையில், அதிபர் டோனல்ட் டிரம்ப் நிர்வாகத்திலிருந்து வெளியேறுவதன் அடையாளமாய் வெள்ளிக்கிழமை வெள்ளை மாளிகையில் நடைபெற்ற பிரியாவிடை நிகழ்வில், மாஸ்க்கின் வலது கண்ணோரம் கன்றிப் போயிருந்ததும் கவனத்தை ஈர்த்தது.
போதைப்பொருள் மயக்கத்தினால் அது விளைந்திருக்குமோ என்ற சந்தேகத்தில் செய்தியாளர்கள் கேட்ட போது, தனது 5 வயது மகன் விளையாட்டாகக் குத்தியதால் கண் வீங்கிப் போனதாக மழுப்பலாகக் கூறினார்.
முன்னதாக, இலோன் மாஸ்க்கின் போதைப்பொருள் பழக்கம் குறித்து நீங்கள் அறிவீர்களா என டிரம்பிடமும் கேட்கப்பட்டது; அது பற்றி தமக்கு எதுவும் தெரியாது எனக் கூறிய டிரம்ப், இலோன் மாஸ்க் ஓர் அற்புமான மனிதர் என புகழாரம் சூட்டினார்.
டிரம்பின் வலது கரமாக வலம் வந்த இலோன் மாஸ்க், அதிகளவில் போதைப்பொருள் எடுத்துக் கொள்வதாக நியூ யோர்க் டைம்ஸ் அம்பலப்படுத்தியதிலிருந்து, இவ்விவகாரம் சூடு பிடித்துள்ளது.