
கோலாலம்பூர், ஜூன்-16 – “வீட்டுக்கு வா அல்லது ஹோட்டலுக்கு போகலாம்” எனக் கூறி ஒரு பெண்ணிடம் அநாகரீகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் போலீஸ்காரர் விசாரிக்கப்படுகிறார்.
புக்கிட் அமான் போலீஸின் நெறிமுறை மற்றும் தரக் கட்டுப்பாடு பின்பற்றல் துறையின் இயக்குநர் அஸ்ரி அஹ்மாட் அதனை உறுதிப்படுத்தினார்.
சம்பந்தப்பட்ட போலீஸ்காரர் அடையாளம் காணப்பட்டு, நடப்புப் பணியிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளார்.
கட்டொழுங்கு விசாரணைக்கும் அவர் ஆளாகியுள்ளார்.
புகாரில் அடிப்படை இருக்கும் பட்சத்தில் எந்தவொரு போலீஸ் அதிகாரியானாலும் உரிய நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம் என்றார் அவர்.
வைரலான அச்சம்பவம் அம்பாங் மாவட்டத்தில் நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது.
குற்றவியல் சட்டம் மற்றும் 1998 தொடர்பு – பல்லூடகக் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
அந்த வீடியோவில் இருக்கும் பெண்ணும் விசாரணைக்கு முன்வந்து உதவுமாறு அம்பாங் ஜெயா போலீஸ் தலைவர் மொஹமட் அசாம் இஸ்மாயில் கேட்டுக் கொண்டார்.
டிக் டோக்கில் பதிவேற்றப்பட்ட ஒன்றரை நிமிட அவ்வீடியோ பின்னர் இன்ஸ்டாகிராமில் வைரலாகியது.