
கோலாலம்பூர், ஜன 13 – தென் தாய்லாதில் Muang Patani போலீஸ் நிலையத்திற்கு அருகே மோட்டார்சைக்கிளில் வைக்கப்பட்ட வெடிகுண்டு வெடித்ததில் மலேசிய ஆடவர் ஒருவர் உட்பட எழுவர் காயம் அடைந்தனர். காலை 8 மணியளவில் அந்த போலீஸ் நிலையத்தில் அணிவகுப்பு நடைபெற்று முடிந்தவுடன் குண்டு வெடித்ததாக Muang Pattani போலீஸ் தலைவர் Jeffery Sulaiman தெரிவித்தார். வெடிக்கப்பட்ட குண்டின் துகள்கள் பட்டதால் தற்காப்பு தொண்டூழியர்களில் அறுவர் காயம் அடைந்தனர்.
இந்த சம்பவம் நடந்தபோது குண்டு வைக்கப்பட்ட மோட்டார்சைக்கிளுக்கு அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த தனது காரில் இருந்த மலேசியர் காயம் அடைந்தார். தாய்லாந்து பிரஜையான தனது மனைவியின் கடப்பிதழ் காணாமல்போனதால் அது குறித்து அவர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யச் சென்றிருந்ததபோது காரில் காத்திருந்த வேளையில் குண்டு வெடித்ததால் அந்த ஆடவர் காயம் அடைந்தார். தனது திருமண ஏற்பாடுகளை கவனிப்பதற்காக அந்த மலேசியர் சனிக்கிழமை பட்டாணி வந்ததாக அறிவிக்கப்பட்டது. காயம் அடைந்த அனைவரும் பட்டாணி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இந்த குண்டு வெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்தவொரு தரப்பினரும் பொறுப்பேற்கவில்லை.