
பெட்டாலிங் ஜெயா, மே 20 – பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றத்தின் முன்னாள் உறுப்பினரும் , ‘ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்’ என்ற நூல் ஆசிரியருமான திருவேங்கடம் அன்னமுத்து காலமானர்.
சிறிது நாட்களாக உடல் நலமின்றி இருந்த 66 வயதுடைய அவர் நேற்று அதிகாலையில் இறந்தார்.
பெட்டாலிங் ஜெயா மாகர் மன்ற உறுப்பினராக இருந்த காலக்கட்டத்தில் இந்தியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதில் அவர் தீவிரமாக குரல் கொடுத்து வந்தார்.
அனைவரிடமும் நட்பு பாராட்டக்கூடிய அவர் எப்போதும் வெளிப்படைத் தன்மையுடன் நடந்து கொள்ளும் பண்பாளராக விளங்கினார்.
நல்ல சமூக சிந்தனையாளராகவும் பல துறைகளில் ஆளுமை நிறைந்தவராகவும் விளங்கிய அவர் இந்திய மாணவர்களின் பல்கலைக்க கழக வாய்ப்புக்கள், சிறந்த தேர்ச்சி பெற்றிருந்தும் பல மாணவர்களுக்கு உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் மருத்துவம், பொறியியல் , பல் மருத்துவம் போன்ற துறைகளில் வாய்ப்பு கிடைக்காத அவலங்களை ” ஒப்பிட்டேன் ஓலமிட்டேன்” என்ற தலைப்பில் மலேசிய நண்பனில் அவர் தொடர் கட்டுரையாகவே எழுதி வந்தாதோடு அது வாசகர்களின் பலரது பாராட்டையும் பெற்றது.
அந்த கட்டுரைகளை பின்னர் அவர் நூல் வடிவமாகவும் வெளியிட்டார்.
அரசாங்கத் துறைகளில் இந்தியர்களுக்கான வேலை வாய்ப்பு , வர்த்தக கடனுதவி திட்டங்கள், கல்வி உபகாரச் சம்பளம், மெட்ரிகுலேசன் திட்டத்தில் இந்திய மாணவர்களுக்கான வாய்ப்புக்கள் உட்பட பல்வேறு சமூக நல பிரச்னைகளை அலசி ஆராய்ந்து அதற்கு அரசாங்கம் தீர்வு காண வேண்டும் என துணிச்சலாக குரல் எழுப்பியவராகவும் திருவேங்கடம் விளங்கினார்.
அவருக்கு மனைவியும் மூன்று பிள்ளைகளும் உள்ளனர். எண் 14, JLN 8/14 , பெட்டாலிங் ஜெயா என்று முகவரியிலுள்ள இல்லத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கிற்கு பின் திருவேங்கடத்தின் நல்லுடல் பெட்டாலிங் ஜெயா கம்போங் துங்கு இந்து மயானத்தில் பிற்பகல் 2 மணியளவில் தகனம் செய்யப்படும்.