
ஜோகூர் பாரு, டிசம்பர் 8 – ஜோகூர் பாருவில், 4 வயது சிறுவனை ஓரினப் புணர்ச்சிக்கு உட்படுத்திய சந்தேகத்தில், குழந்தைப் பராமரிப்பாளரின் 23 வயது மகன் கைதாகியுள்ளான்.
தாமான் பெரிண்டாஸ்திரியான், தம்போய் ஜெயாவில் நேற்று மாலை அவன் கைதானதை, தென் ஜோகூர் பாரு போலீஸ் தலைவர் துணை ஆணையர் ரவூப் செலாமாட் (Raub Selamat) உறுதிப்படுத்தினார்.
அச்சிறுவனை, அவ்விளைஞனின் தாய் ஈராண்டுகளாக பராமரித்து வரும் நிலையில், கடந்த அக்டோபரில் சிறுவனென்றும் பாராமல் 2 முறை இயற்கைக்கு மாறான உறவுக்கு அவன் கட்டாயப்படுத்தியுள்ளான்.
பாதிக்கப்பட்ட சிறுவனிடம் திடீரென மாற்றங்கள் காணப்பட்டதால் சந்தேகமடைந்த பெற்றோர் போலீசில் புகார் செய்தனர்.
தொழிற்சாலை ஊழியரான சந்தேக நபர் இன்று முதல் விசாரணைக்காகத் தடுத்து வைக்கப்படுகிறான்.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அவனுக்கு 5 முதல் 20 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனையும் பிரம்படியும் விதிக்கப்படலாம்.
குழந்தைப் பராமரிப்பாளரைத் தேர்வுச் செய்வதில் மேலதிக கவனத்தோடு இருப்பதோடு, சந்தேகப்படும்படியான நடவடிக்கை குறித்து உடனடியாக புகாரளிக்க வேண்டுமென்றும் பொதுமக்களை ரவூப் செலாமாட் அறிவுறுத்தினார்.