கோலாலம்பூர், நவ 20 – மலேசியாவின் முன்னாள் போலீஸ்காரரான சிருல் அஸ்ஹர் உமர் ஆஸ்திரேலியாவின் தடுப்பு காவலிருந்து விடுவிக்கப்பட்டது குறித்து கொலை செய்யப்பட்ட மங்கோலிய மொழிப்பெயர்ப்பாளர் அல்தான்துயாவின் தந்தையான டாக்டர் ஷாரிபு சேதேவ் அதிர்ச்சி அடைந்துள்ளார். சிருல் மற்றும் 86 இதர கைதிகளை விடுவிக்கும்படி ஆஸ்திரேலிய உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்ததை தொடர்ந்து அவர்கள் விடுவிக்கப்பட்ட ஒரு வாரத்திற்கு பின் பேராசிரியர் டாக்டர் ஷாரிபு சேதேவ் இதனைத் தெரிவித்தார். 2015ஆம் ஆண்டு முதல் வில்லாவுட் குடிநுழைவு மையத்தில் தடுத்துவைக்கப்பட்டிருந்த 52 வயதுடைய சிருல் நவம்பர் 11 ஆம் தேதி விடுவிக்கப்பட்டார்.
தமது மகளை கொலை செய்த நபர் தற்போது ஆஸ்திரேலியாவிலிருந்து சுதந்திரமாக வெளியேறியிருப்பது குறித்து ஷாரிபு சேதேவ் அதிர்ச்சியடைந்ததோடு ஆஸ்திரேலியாவின் இந்த நடவடிக்கையினால் தாம் ஏமாற்றம் அடைந்துள்ளதாக தெரிவித்திருக்கிறார். விடுதலை செய்யப்பட்ட கைதிகளில் தமது மகளை கொலை செய்த குற்றவாளியும் ஒருவர் என்பதை ஆஸ்திரேலிய அரசாங்கத்தின் பிரதிநிதி தமக்கு தெரிவிக்கவில்லையென அவர் கூறினார். கொலையுண்டவரின் குடும்பத்திற்கு மனித உரிமைக்கான நீதி எங்கே என ஆஸ்திரேலிய பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் ஷாரிபு சேதேவ் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் மங்கோலியன் தூதரகம் உள்ளது, அதே போன்று மங்கோலியாவிலும் ஆஸ்திரேலிய தூதரகம் உள்ளது. அவர்களில் எவரும் தம்முடன் தொடர்புகொள்ளவில்லை என அவர் தெரிவித்தார். கொலையாளியை ஆஸ்திரேலிய அரசாங்கம் விடுவித்தது ஏன் என்றும் தமக்கு தெரியவில்லை என்றும் ஷாரிபு சேதேவ் கூறினார்.