பெட்டாலிங் ஜெயா, ஜனவரி 11 – கடந்தாண்டு நவம்பர் மாதம் வரையில், நாட்டில் வேலையில்லாதோரின் விகிதம் 3.3 விழுக்காடு குறைந்து, ஐந்து லட்சத்து 69 ஆயிரத்து 200 பேராக பதிவுச் செய்யப்பட்டதாக, DOSM – மலேசிய புள்ளிவிவரத் துறை தெரிவித்துள்ளது.
அதே காலகட்டத்தில், நாட்டின் ஆட்பலத் திறனும் முன்னேற்றத்தை பதிவுச் செய்ததாக, தேசிய புள்ளிவிவரத் துறையின் தலைவர் டத்தோ ஸ்ரீ டாக்டர் முஹமட் உசிர் மஹிடின் சொன்னார்.
அது, நடப்பு பொருளாதார வளர்ச்சியாலும், அதனால் அதிகரித்து வரும் ஆட்பலத் தேவையாலும், நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் குறைந்துள்ளதை காட்டுகிறது.
கடந்தாண்டு அக்டோபரில், நாட்டில் வேலையில்லா திண்டாட்ட விகிதம், ஐந்து லட்சத்து 70 ஆயிரத்து 900 பேராக பதிவான வேளை; நவம்பரில் அந்த எண்ணிக்கை 0.3 விழுக்காடு குறைந்து ஐந்து லட்சத்து 69 ஆயிரத்து 200 பேராக பதிவானது.
அதனால், கடந்தாண்டு நவம்பரில், நாட்டின் மொத்த ஆட்பலம் அல்லது தொழிலாளர் எண்ணிக்கை, ஒரு கோடியே 70 லட்சமாக அதிகரித்தது.
அதோடு, நவம்பரில் மட்டும், சுமார் 30 ஆயிரம் பேர் வேலையில் அமர்ந்த வேளை; நாட்டிலுள்ள, மொத்த மக்கட் தொகையில், 75.3 விழுக்காட்டினர் தொழிலாளர் பிரிவில் இருந்தனர்.
அதே போல, சொந்த தொழிலில் ஈடுபட்டிருந்தவர்களின் எண்ணிக்கையும், 0.3 விழுக்காடு அதிகரித்து, 29 லட்சத்து 90 ஆயிரமாக பதிவானது குறிப்பிடத்தக்கது.