
புத்ராஜெயா, ஏப்ரல்-8- சமூக ஊடகங்களில் 3R எனப்படும் இனம், மதம், ஆட்சியாளர்கள் தொடர்பான நிந்தனைப் பதிவுகளை வெளியிட்டதன் பேரில், இருவருக்கு எதிராக 4 விசாரணை அறிக்கைகள் திறக்கப்பட்டுள்ளன.
மலேசியத் தொடர்பு – பல்லூடக ஆணையமான MCMC அதனை உறுதிப்படுத்தியது.
அந்த இருவரில் ஒருவர் அரசியல் பிரபலம் ஆவார்.
பேராக் மாநில கீதம், Petronas மற்றும் Gas Malaysia வாயிலாக மலாய்க்காரர்களின் பொருளாதார ஆதிக்கம், கோலாலம்பூர் கோபுரத்தின் ‘கையகப்படுத்தல்’ என இன உணர்ச்சியைத் தூண்டும் வகையில் அவர் பதிவிட்டிருந்தார்.
இருவரின் வாக்குமூலங்களும் சைபர்ஜெயா MCMC தலைமையகத்தில் பதிவுச் செய்யப்பட்டன.
ஒருவரின் கைப்பேசியும் சிம் அட்டையும் தடயவியல் பரிசோதனைக்காகக் கைப்பற்றப்பட்ட வேளை, இன்னொருவரின் கைப்பேசியை வேறொரு புகார் தொடர்பில் ஏற்கனவே போலீஸ் பறிமுதல் செய்து விட்டது.
திருத்தப்பட்ட 1998-ஆம் ஆண்டு தொடர்பு – பல்லூடகச் சட்டத்தின் கீழ் விசாரணை நடைபெறுகிறது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், அதிபட்சம் 500,000 ரிங்கிட் அபராதமும் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்படலாம்.
சமூக ஊடகங்களை மக்கள் பொறுப்போடு பயன்படுத்த வேண்டும்; நல்லிணக்கத்தைப் பாதிக்கும் வகையில் நடந்துகொள்ளக் கூடாதென MCMC மீண்டும் நினைவுறுத்தியது