
கோலாலம்பூர், மே-19 – உலகளவில் மனநல பாதிப்பு மிகவும் அழுத்தமான சுகாதாரப் பாதுகாப்பு சவால்களில் ஒன்றாக மாறியுள்ளது.
இதில் மனிதர்களிடம் உள்ள குறைபாட்டில் மன அழுத்தமே முதலிடத்திலும் உள்ளது.
இத்தகைய மனநல அழுத்தத்தால் இளைஞர்கள் மிகவும் ஆழமாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக, ம.இ.கா மத்திய செயலவை உறுப்பினரும் தேசிய சுகாதாரப் பிரிவின் தலைவருமான Dr T. நோவலன் கூறியுள்ளார்.
இதனைக் கருத்தில் கொண்டு, ம.இ.கா தேசிய சுகாதாரப் பிரிவும் இளைஞர் பிரிவும் இணைந்து இளைஞர்களின் மனநல ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமொன்றை நடத்தவுள்ளது.
மே 21-ஆம் தேதி புதன்கிழமை மாலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை ம.இ.கா தலைமையகத்தில் அந்நிகழ்வு நடைபெறுகிறது.
‘இளைஞர்களின் மனநல ஆரோக்கியத்தைப் பாதுகாப்போம்’ என்ற பெயரில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள அந்நிகழ்வில், பினாங்கு பெரிய மருத்துவமனையின் மனநல வாரிய உறுப்பினரும் சினேஹம் அமைப்பின் தலைவருமான டத்தோ Dr ஃபுளோரன்ஸ் மனோரஞ்சிதம் (Dato Dr.Florance Manoranjitham Sinniah) முக்கிய உரை ஆற்றவுள்ளார்.
இளைஞர்களை மையமாகக் கொண்ட மனநலப் பேச்சுக்கள் மற்றும் கருத்தரங்குகள், இளைஞர்களின் நல்வாழ்வை மேம்படுத்துவதிலும் மனநலக் கல்வியறிவை மேம்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கின்றன.
இந்தத் தலைப்புகளில் உரையாற்றுவதன் மூலம், இளைஞர்கள் தங்கள் மனநலத்தை மதிக்கவும் பயிற்சி செய்யவும், ஆரோக்கியமான எதிர்காலத்திற்கான மீள்தன்மையை வளர்க்கவும் அவர்களுக்கு நாம் வாய்ப்பு அளிக்க முடியும்.
எனவே, இந்திய இளைஞர்கள் திரளாக வந்து இதில் கலந்துகொள்ளுமாறு Dr நோவலன் கேட்டுக் கொண்டார்.