
புக்கிட் மெர்தாஜாம், ஏப்ரல்-29, பினாங்கு, புக்கிட் மெர்தாஜாம், ச்செரோக் தோக்குனில் ஒரு முதியவர் கத்தியால் குத்தப்பட்டு, அடித்தே கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், இன்னொரு முதியவர் உட்பட 5 பேர் கைதாகியுள்ளனர்.
அங்குள்ள குடில் ஒன்றில் சண்டை நடப்பதாக நேற்று பிற்பகல் 3.20 மணி வாக்கில் போலீஸுக்குத் தகவல் கிடைத்தது.
சென்று பார்த்த போது 63 வயது முதியவர் கட்டையால் தாக்கப்பட்டு கத்தியால் குத்தப்பட்டு இறந்துகிடந்தார்.
கொல்லப்பட்டவரும், 70 வயது சந்தேக நபர் உள்ளிட்ட இதர ஐவரும் முன்னதாக அங்கு அமர்ந்து பேசிக்கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென பின்னாலிருந்து வந்து கட்டையால் சந்தேக நபர் ஓங்கி அடிக்க, பாதிக்கப்பட்ட முதியவர் சுருண்டு விழுந்தார்.
கண்ணிமைக்கும் நேரத்தில் அவரைக் கத்தியால் குத்தி விட்டு சந்தேக நபர் கிளம்பிச் சென்றது விசாரணையில் கண்டறியப்பட்டது.
3 நாட்களாகவே அவ்விருவக்கும் இடையில் ஏதோ பிரச்னைப் போய்க் கொண்டிருந்ததே கொலைக்கும் காரணமென, செபராங் பிறை தெங்கா போலீஸ் தலைவர் துணை ஆணையர் ஹெல்மி அரிஸ் கூறினார்.
குற்றவியல் சட்டத்தின் கீழ் அக்கொலை விசாரிக்கப்படுகிறது.