கோலாலம்பூர், நவ 22 – அடுத்தாண்டு பிப்ரவரி தொடங்கி ஏர் ஆசியா இந்தியாவின் திருவனந்தபுரத்திற்கு மீண்டும் தனது விமானச் சேவையை தொடங்கவுள்ளது. பிப்ரவரி 21ல் தொடங்கவுள்ள இந்த சேவை, வாரத்திற்கு 4 முறை அங்குச் செல்லும்.
கோவிட்-19 பெருந்தொற்றுக்குப் பிறகு கட்டம் கட்டமாக இந்தியாவிற்கான தனது சேவையை மீண்டும் தொடங்கி வரும் நிலையில், விரைவில் இந்தியாவில் 9 இடங்களுக்கு வாரத்திற்கு 71 விமானச் சேவைகளை ஏர் ஆசியா வழங்கவிருப்பதாக அதன் தலைமை செயல்முறை அதிகாரி ரியாட் அஸ்மாட் தெரிவித்திருக்கிறார்.
இன்று தொடங்கி அடுத்தாண்டு நவம்பர் 26 வரை கோலாலம்பூரிலிருந்து திருவனந்தபுரத்திற்கு ஒரு வழி பயண டிக்கெட் 199 ரிங்கிட்டிற்கு விற்கப்படும் என அவர் அறிவித்துள்ளார்.
மலேசிய பயணிகளுக்கு ஏர் ஆசியாவின் மிகப் பிரபலமான சுற்றுலாத் தளமாக இந்தியா விளங்குவதாகவும் ரியாட் தெரிவித்தார்.
ஏர் ஆசியா இவ்விரு நாடுகளுக்கான 47 விழுக்காடு பயணச் சந்தையை தன் வசம் வைத்திருப்பதாக அவர் மேலும் கூறினார்.
தற்போது ஏர் ஆசியா சென்னை, திருச்சி, ஐதராபாட், கொச்சி, பெங்களூரு மற்றும் கொல்கத்தாவிற்கு நேரடியாக செல்கிறது.
ஏர் ஆசியா X வழி அம்ரித்சாருக்கும் புது டெல்லிக்கும் பயணிக்கிறது.